திண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோயில்!

78

திண்டுக்கல் வீர ஆஞ்சநேயர் கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி என்ற ஊரில் உள்ள கோயில் வீர ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பெயருக்கு ஏற்றாற்போல இந்த ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதே சமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில் ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போன்றும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் அமைந்துள்ளது.

வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள சித்தர் மலையில் பாஞ்சாலியுடன் பஞ்ச பாண்டவர்கள் தங்கினர். அவர்களது தாகத்திற்காக தண்ணீர் தேடி வாயு புத்திரனான பீமன் இந்தப் பகுதிக்கு வந்தான்.

தண்ணீரை தேடி அலைந்த பீமனின் கண்களுக்கு ஆஞ்சநேயர் தென்பட்டார். தருமனின் அனுமதியுடன் வீரனான பீமனே ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ததால் இவர், வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். கலங்காத மனம், வீரம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம் செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார். பணிமாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு என்று பலன் பெற்றவர்கள் கூறுவதுண்டு.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றியும், வடை மாலை சாற்றியும் வழிபாடு செய்கின்றனர். வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக் கொதித்தவர்: ராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் ஸ்ரீ ராமஜெயம் எழுதுபவர்களை பல இன்னல்களிலிருந்து காக்கிறார்.

ராமாயணமோ அல்லது ராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். நின்ற கோலத்தில் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர் வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் காட்சி தருகிறார்.

ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால், இந்தக் கோயிலில் நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், சப்த கன்னிகள், நாகர், கருப்பணசாமி தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும் கோயில் கட்டி வழிபடும்படி கூறினார்.

ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரை சுத்தம் செய்து பார்த்த போது அங்கு பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்ற போதும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக சுயம்புவாக மாறியது பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.