கந்த சஷ்டி கவசம் பாடினால் ஏற்படும் பலன்கள்!

304

கந்த சஷ்டி கவசம் பாடினால் ஏற்படும் பலன்கள்!

பால தேவராய சுவாமிகளால் பழனி முருகன் மீது பற்று கொண்டு பாடப்பட்ட பாடல் தான் கந்த சஷ்டி கவசம். காக்க என்று இறைவனை வேண்டிக் கொள்ளும் பாடலை கவசம் என்று கூறுவர். ஒரு சமயம் பால தேவராய சுவாமிகள் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வாழ்க்கையை வெறுத்து கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் திருச்செந்தூர் வந்தார்.

அப்போது, அவர் வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. முருகன் மீது பற்று கொண்ட பால தேவராய சுவாமிகள் அந்த திருவிழாவைக் கண்டு தனது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றினார். மேலும், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

முதல் நாள்: முதல் நாளில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்தார். அவருக்கு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அளித்தார். இதையடுத்து, சஷ்டியை நோக்க சரவண பவணர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் என்று தொடங்கும் திருச்செந்தூர் கோயிலுக்கான சஷ்டி கவசத்தை எழுதி முடித்தார்.

தொடர்ந்து 5 நாட்கள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களுக்கான சஷ்டி கவசங்களை எழுதி முடித்தார். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கான சஷ்டி கவசத்தை எழுதி முடித்ததும், பால தேவராய சுவாமிகளின் வயிற்று வலி காணாமல் போனது. இதை உணர்ந்த பால தேவராயர் முருகப் பெருமானை ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தார்.

பாம்பன் சுவாமிகள்…

பால தேவராய சுவாமிகள் போன்று பாம்பம் சுவாமிகள் மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாடிக் கொண்டிருப்பார். அப்படி ஒரு நாள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தானும் இது போன்று கவசநூலை முருகன் மீது பற்று கொண்டு பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் பாடியது தான் சண்முக கவசம். இது கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை கொண்டது. சஷ்டி விரதம் முருகப் பெருமானுக்கு உகந்த விரதம். இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, 6ஆம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்கு முகங்களும் 6, படை வீடுகளும் 6, முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6, சரவணபவ என்ற திருமந்திரமும் 6 தான். இவ்வளவு ஏன் ஜாதகத்தில் 6ஆம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு ஆகியவற்றைக் குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் சக்தி படைத்தவர் முருகப் பெருமான்.

நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தோடு, திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 5 படை வீடுகளுக்கும் சேர்த்து பால தேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நன்மையளிக்கும்.

சஷ்டி கவசம் பலன்கள்:

யார் ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு நோய்கள் அண்டாது. பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழலாம். நவக்கிரகங்களும் நன்மை அளிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இப்படி பல நன்மைகள் கிடைக்கும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.