கல்வியில் சிறந்து விளங்க சென்று வர வேண்டிய கோயில்!
ஈரோடு மாவட்டம் பவானி என்ற ஊரில் உள்ள கோயில் ஆதிகேசவப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் மூலவராக காட்சி தருகிறார். கூடலழகர் உற்சவராக திகழ்கிறார். சௌந்தரவல்லி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.
ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்த நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும். எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
கோயில் முன் மண்டபத்தில் சந்தான கோபாலர் ருக்குமணி, சத்யபாமாவுடன் இருக்கிறார். கருவறையில் ஆதிகேசவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தாயார் சவுந்தரவல்லி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே லட்சுமி நரசிம்மர் சாந்தமான கோலத்தில் இருக்கிறார்.
திருமணம், புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து திருமஞ்சனங்கள் செய்து வழிபடுகின்றனர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் பெருமாளுக்கு பாசிப்பருப்பு நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் துலாபாரம் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் ராதா, ருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறம் பசு ஒன்று உள்ளது. இந்தப் பசுவின் முன் பகுதியில் தலை இருப்பதோடு பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.
இந்தக் கோயிலில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் ஆதிகேசவராகவும் அருளுகின்றனர். சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார (மனித வடிவம்) வடிவத்தில் இருக்கிறார். இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி தாயார், சௌந்தரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது.
அம்பாள், தாயாருக்கு சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும், தாம்பத்தியம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது.
இவை, சிவன், ஆதிகேசவர் இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
கொங்கு நாட்டிலுள்ள முக்கியமான 7 தலங்களில் இத்தலமும் ஒன்று. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்களும் இத்தலத்தில் தோன்றியதாகவும், அவற்றின் வடிவமாக இங்கு சிவனும், திருமாலும் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே, இங்கு வேண்டிக் கொண்டால் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய 3 நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது. இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலத்திற்கு தென் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு.
இந்த நதியில் நீராடி சிவன் திருமாலை வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இங்கு அதிகளவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
அசுர குருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டிய பூலோகத்தில் தலயாத்திரை சென்றான். அவன் இந்த வழியாக சென்ற போது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி, என்று ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்குகினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
அதைக்கண்ட குபேரன் அருகில் வந்த போது தேவர்கள், மகரிஷிகள், கந்தவர்கள் என்று பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் ஒதுங்கி இருந்தன. ஆச்சரியமடைந்த குபேரன், கொடிய மிருகங்களும் அமைதியாக இருக்கும். இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்கு வேண்டுமென எண்ணினான்.
இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பி தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர். குபேரன், அவர்களிடம் புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்போதும் அருள வேண்டும் என்று வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார்.