குரு சாபம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

51

குரு சாபம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

மீனாட்சி சொக்கநாதர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது.

ஆலயத்தின் சிறப்பு:

இங்குள்ள சி வனை வழிபடும் முன் கோயிலுக்கு அருகிலுள்ள படித்துறை விநாயகரை வழிபாடு செய்து, சிதறு காய் உடைத்து விட்டு, சிவனையும் அம்மனையும் வழிபடுவது மரபு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

கிழக்கு பார்த்த ராஜகோபுரம் 5 நிலை, 5 கலசங்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கோபுரம் தாண்டி சென்றவுடன் அமைந்துள்ள நந்தி மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், சிவனை நோக்கிய நந்தி அமைந்துள்ளது. நந்தி மண்டபத்தின் வலது புறம் நவக்கிரக சன்னதியும், தூணில் ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பமும் உள்ளது.

நந்தி மண்டபம் அடுத்துள்ள சன்னதியில் சிவபெருமான் சர்வ அலங்காரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனுக்கு வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அதனை அடுத்து அன்னை மீனாட்சி சன்னதியும் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப் போலவே இங்கும் சிவனுக்கு வலது புறம் அன்னை மீனாட்சி அருள்பாலிப்பதால் இத்தலம் திருமணத்தலம் எனப்படுகிறது.

இக்கோவிலின் சிறப்பம்சம்:

ஆண்டு தோறும் மார்ச் 20 முதல் 30 வரை மூலவர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு. இங்குள்ள படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார். இக்கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது.

தல வரலாறு:

ஒரு முறை மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னன் அந்தப்புரத்தில் மகாராணியுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது பாண்டியனின் ராஜகுருவான பரஞ்சோதி முனிவர் அவசர வேலையாக மன்னனைக்காண அந்தப்புர வாயிலுக்கு வந்தார்.

நீண்ட நேரமாகியும் மன்னன் வெளியே வராததால் ராஜகுரு, வாயில் காப்போனிடம், நீண்ட நேரம் மன்னனை காண ராஜகுரு காத்திருந்த தகவலை மன்னனிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டு தனது மணலூர் ஆசிரமத்திற்கு செனறார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மன்னனுக்கு ராஜகுரு காத்திருந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வருத்தமடைந்த மன்னன் ராஜகுருவை சந்திக்க ஆசிரமத்திற்கு சென்று வணங்கி, தனது தவறை பொறுத்தருளுமாறு வேண்டினான். மன்னனை மன்னித்த ராஜகுரு, குருவை நிந்தித்த தோஷம் நீங்கவும், குரு சாபம் விலகவும், செங்காட்டிருக்கை இடத்து வளி எனப்படும் தற்போதுள்ள அருப்புக்கோட்டையில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபடும் படி கூறினார். இதனடிப்படையில் மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது.

பக்தர்களின் பிரார்த்தனை:

திருமணத்தடை உள்ளவர்கள், குரு சாப நிவர்த்தி வேண்டுபவர்கள், பிதுர் சாப நிவர்த்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற பிரமோற்சவ காலத்தில் 12 நாள் கோயிலை வலம் வருகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்திக்கும், சரஸ்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு அம்மன், சுவாமிக்கு வலது பக்கத்தில் அருள்பாலிப்பதுடன் சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் இருப்பதால் திருமணத்தடை நீக்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் சிறந்த தலமாக விளங்குகிறது. குறிப்பிட்ட பருவத்தில் ருது ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் விரைவில் இவர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் சாற்றி அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை செய்கின்றனர்.