குழந்தைப் பாக்கியம் கிடைக்க ஸ்ரீ வைர முனீஸ்வரர் வழிபாடு!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திசவிளக்கு (தெசவிளக்கு) என்ற கிராமத்தின் கொல்லங்கரடு என்ற மலையில் உள்ள கோயில் ஸ்ரீ வைர முனீஸ்வரர் கோயில். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தன், விநாயகர், ஸ்ரீ வைர முனீஸ்வரர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இதில், வைர குருமணி தனது வலது காலை தலையில் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.
மற்ற கோயில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் ஸ்ரீவைர முனீஸ்வரராக குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச் செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோயிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள்.
மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மூலவரான ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் எலுமிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைப்பேறு வேண்டி கோயிலுக்கு வரும் தம்பதியினருக்கு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த பிரசாதத்தை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அந்த தம்பதியினருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இதே போல் கால் வலி மற்றும் உடல் வலியால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வாங்கிச் செல்கிறார்கள். இந்த எண்ணெயை தங்களது உடலில் தேய்த்துக்கொண்டால் அந்த வலி காணாமல் போய்விடுகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மையாக சொல்லப்படுகிறது.