சனி தோஷம் நீங்க வழிபட வேண்டிய சனீஸ்வரர் கோயில்!
விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு என்ற ஊரில் உள்ள கோயில் சனீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சனீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். சனிப்பெயர்ச்சி நாளில் இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. 21 அடி உயரத்தில் நின்ற நிலையில் திருவிழிகள் கருணைப் பார்வை பார்க்க கருப்பும், நீலமும் கலந்த உடையணிந்து காட்சி தரும் சனீஸ்வரர் இடக்காலை தரையில் வைத்து வலக்காலை பிரம்மாண்டமாக காக வாகனத்தின் மீது ஊன்றி காட்சி தருகிறார்.
சனீஸ்வரர் வழிபாடு பெருகி வருகிறது. அவர் பயமுறுத்தும் கடவுள் அல்ல நியாயஸ்தர். தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டார். அவருக்கு சூடம் ஏற்ற வேண்டாம். எள்ளையும், எண்ணெயையும் ஊற்றி காக்கா மீதிருக்கும் அவரையே காக்கா பிடிக்க முயல வேண்டாம். அர்ச்சனை செய்வதன் மூலம் உங்கள் குறையைச் சொல்ல வேண்டாம். உண்டியல் போட்டு அவரை சரிக்கட்ட முயல வேண்டாம்.
உங்கள் குறையை நீங்களே அவரிடம் சொல்லுங்கள். அவர் குறை தீர்ப்பார் என்ற அடிப்படையில் ஒரு அமைதியான இடத்தில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் சனீஸ்வரர் மட்டுமல்ல. உச்சிஷ்ட கணபதி, 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், புவனேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், 11 அடி உயர பஞ்சமுக ஈஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், 8 அடி தண்டாயுதபாணி, 18 அடி உயர அஷ்டாதசபுஜ துர்க்கை ஆகியோருக்கும் தனித்தனி விமானங்களுடன் சன்னதிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. சிலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக கலை நுட்பத்துடன் விளங்குகிறது.
சனிதோஷ நிவர்த்தி பெற இங்கு சென்று பிரார்த்தனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை தோறும் எள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து வழிபடலாம். பிரும்மானந்த சுவாமிகளால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். சனீஸ்வரன் சன்னதி முன்பு அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்து வர வேண்டும். நுழைவிடத்தில் உள்ள கணபதி சிலை இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.
தேசிங்கு ராஜா வணங்கிய கணபதியாக இது கருதப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார். சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என்று ராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான்.
தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் ராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்த நிலையில் சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போய்கிறது. நாரதர் சனீஸ்வரரிடம் எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்துவிடு, என்கிறார். அதன்படி குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலை அடித்து ராவணன் ஒடித்தான். அதன் பிறகு சனி பகவான் நொண்டிக் கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் கூட சொல்வார்கள்.
இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது.