திருமண வரன் அமைய வழிபட வேண்டிய கோயில்!
நீலகிரி மாவட்டம் ஊட்டி என்ற ஊரில் உள்ள கோயில் காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதர் மூலவராகவும், விசாலாட்சி அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலித்த வண்ணம் இருக்கின்றனர். திருக்காந்தல் என்பதே இந்த ஊரின் புராண பெயராக இருந்துள்ளது. மகா சிவராத்திரி, தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, பிரதோஷம் ஆகிய நாட்கள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
பாணலிங்கமே இந்தக் கோயிலில் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. இந்த மண்டபம் தியானம் செய்ய ஏற்றது. நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள கோயில் இது என்பதால், அதிக சிறப்பு வாய்ந்துள்ளது. சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளதால், இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்தால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலில் மன உருகி வேண்டினால், திருமண பாக்கியம், குழந்தை வரம் அமையும். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் வழிபாடு செய்கின்றனர். சுவாமிக்கு பால், இளநீர், எண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
விரதம் இருத்தல், தான தர்மம் செய்தல் ஆகியவற்றை இந்தக் கோயிலில் வைத்து செய்தால் அதற்குரிய பலனும், புண்ணியமும் சேரும் என்பது ஐதீகம். இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற ஒரு ரேகை அமைப்பு பாணலிங்கத்திற்கு படர்ந்திருக்கும். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம். பாண லிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை.
விஷ்ணு, பிரம்மா முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை ஆகியவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.
இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்த துறவு பூண்டார். அதன் பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.
இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். இவரது காலத்திற்குப் பிறகு வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய் போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.