பில்லி, சூனியம் பாதிப்பிலிருந்து விடுபட வழிபட வேண்டிய கோயில்!

117

பில்லி, சூனியம் பாதிப்பிலிருந்து விடுபட வழிபட வேண்டிய கோயில்!

நீலகிரி மாவட்டம் உதகை என்ற ஊரில் உள்ள கோயில் சந்தைக் கடை மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் மகா மாரியம்மன், மகா காளியம்மன் ஆகியோர் மூலவராக திகழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இந்தக் கோயிலில் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடக்கிறது. அப்போது துர்க்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன், பகவதி ஆகிய கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது.

தேர் வீதி உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுகின்றனர். உப்பு, நீரில் கரைவது போன்று தங்களது துன்பங்கள் யாவும் முழுமையாக நீங்கி அம்மனின் அருள் பெறுவதாக நம்பிக்கை. ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது சிறப்பு. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது.

மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் இந்தக் கோயிலில் உள்ள மாரியிடம் வேண்டிக் கொண்டால் பூரணமாக குணமடைகிறார்கள். இவை தவிர திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிப்படையவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்பு புடவையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். சிறு அளவில் தேர் செய்து தேர்த்திருவிழா அன்று அம்மனுக்கு செலுத்துகின்றனர். உப்பு அள்ளி வீசுகின்றனர். இவை தவிர குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்களது நிவர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

அம்மனுக்கு விளக்கு ஏற்றுதல், புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிவர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம். இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.

இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்திரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம், செய்வினை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும். வண்டிமாடு கால்நடைகளுக்கு கட்டுவதால் நல்ல பலன்கள் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் ஊட்டி பகுதியில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். அப்போது அவர்கள் தங்குவதற்கு இடம் கேட்டனர். அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அங்குள்ள மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினர். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்கும் தோன்றி மறைந்தது.

அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன் பிறகே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதிலிருந்து இந்தக் கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.