மன அமைதி கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குருகாவூர் என்ற ஊரில் உள்ள கோயில் வெள்ளடைநாதர் கோயில். இந்தக் கோயிலில் வெள்ளடைநாதர் மூலவராக காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர் உற்சவராக திகழ்கிறார். காவியங்கண்ணி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வில்வம் மரம் தல விருட்சமாக திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியில் கட்டமுது படைப்பு விழா, தை அமாவாசை ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது.
இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசை அன்று ஒரு நாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருக்கருகாவூர் வேறு. சீர்காழி தாண்டியுள்ள திருக்கடையூர் வேறு.
இத்தலத்திலுள்ள விநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும் இரண்டு சாமரங்களும் இருக்கிறது. பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கி காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் முருகப் பெருமான் தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
தென் திசையை பார்த்திருப்பதால் இவரை குரு அம்சமாக கருதி வழிபாடு செய்கிறார்கள். இவருக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள சட்டைநாதர், துர்க்கையம்மன் உள்ளனர். இந்த துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம். நவக்கிரக சன்னதி கிடையாது.
தெரியாமல் செய்த பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக் கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு சிவனிடம் வேண்டிக் கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில் சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார். அன்று காலையில் சீர்காழியில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இந்தக் கோயிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர்.
அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக நடக்கிறது. சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே அவரால் இந்தக் கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார்.
செல்லும் வழியில் அவருக்கு பசி எடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி தான் அந்த இடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார்.
அதன்படி சுந்தரரும் அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிட சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அவர் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். சிறிது நேரம் கழித்த பின்பு, அவர் கண் விழித்து பார்த்த போது அங்கு அன்னதான பந்தலோ, அன்னம் பரிமாறியதற்கான தடமோ எதுவும் இல்லை.
இதனால், வியந்த சுந்தரர் தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன் தான் என்பதை அறிந்து கொண்டார். அதன் பிறகு சிவனை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன் பிறகு இத்தலம் வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார். சுந்தரருக்கு சிவன் அன்னம் பரிமாறிய விழா சித்ரா பௌர்ணமியன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு சுகப்பிரசவ நாயகி என்ற பெயரும் உண்டு. இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதையே பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் துர்வாசர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார்.
இவர் தனது இடது கையில் ஏடு வைத்து, வலது கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம். சிவலோக நாதர், பூலோக நாதர், பைரவர் சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர். சைவ, சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு சென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.
இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்கு சென்று கங்கையில் நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி கொடுத்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்று இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார்.
அவருக்கு காட்சி தந்த சிவன் இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.