முன் ஜென்ம பாவங்களை போக்கும் 18 ஆம் படி கருப்பசாமி!

210

முன் ஜென்ம பாவங்களை போக்கும் 18 ஆம் படி கருப்பசாமி!

வளம் மிக்க மலையாள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன், ஒருமுறை பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் திவ்விய தேசத்தில் பள்ளிகொண்ட, அழகே உருவான கள்ளழகரை தரிசிக்க வந்தான்.

அழகரின் செளந்தர்யத்தை கண்ட அந்த அரசன் அதை ஆவாகனம் செய்து தம் தேசத்திற்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான். நாடு திரும்பிய அரசன், மந்திர, தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 பணிக்கர்களை தேர்வு செய்து அழகரின் செளந்தர்யத்தை ஆவாகனம் செய்து வரும்படி கட்டளையிட்டான்.

பதினெட்டு பணிக்கர்களும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். பதினெட்டு பணிக்கர்களுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது.

காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள், அழகர்மலை நோக்கி புறப்பட்டனர். அனைவரும் அழகர் மலையை அடைந்தனர்.

மயங்கி நிற்ற காவல் தெய்வம்

அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது.

அழகரின் அழகிய தங்க ஆபரணங்களை கண்ட 18 பணிக்கர்களும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, ஆபரணங்களை ஆவாகனம் செய்யும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர்.

இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட அடியார் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்து, அந்த 18 பேரையும் கொன்று, களிமண்ணால் படிகள் செய்து, படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு போரையும் புதைத்தனர்.

தன்னிடம் மயங்கி நிற்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் திருவுள்ளம் கொண்டார். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கண்கொள்ள காட்சி தந்து, அருள் புரிந்து, வரம் தந்து, ”என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார்“. காவல் தெய்வம் உள்ளம் மகிழ்ந்தார்.

அழகரின் கட்டளையை ஏற்றார். நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கள்ளழகர், கருமை நிறம் கொண்ட காவல் தெய்வத்திற்கு வரம் தந்தார்.

அன்னையர்கள் இருவரும் தன் பிள்ளைக்கு ஆசி தந்தனர். காடு வீடெல்லாம் முன்னோடியாய் காவல் புரிந்து மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார். 18 பேருடன் வந்த தெய்வமாதலால், பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார்.

அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள்

ஒருநாள் கோயில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி, திருமால்  பள்ளிகொண்ட திருவாயிலையும், மலையையும் காப்பேன், திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட, அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள், பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப்படுகிறது.

ஒரு சமயம் பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு விஜயம் செய்த ஆண்டாள் தாயார், பதினெட்டு படிகளை கண்டு வியந்ததாக கர்ண பரம்பரை செய்தியில் தெரிவிக்க பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோயில் பூட்டபட்டதும், கதவின் திறவுகோல் பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோயில் திறக்கும் முன், பட்டர் கருப்பசாமியிடம் பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவிற்கு அழகர், மதுரைக்கு புறப்படும் போதும், மதுரையிலிருந்து கோயிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு, அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும்.

கோயில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார். இன்றும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

குலதெய்வம் கருப்பசாமி

கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை, மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். இன்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி முன் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

அழகர் கோயிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி, பின்னாளில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வந்தார். தல்லாகுளத்தில் கருப்பணசாமியாக அருள் புரிந்து வருகிறார்.

அனைத்து கிராமங்களிலும் காவல் தெய்வமாக காவல் புரிந்து வருகிறார். முதுகுடியில் நின்ற திருக்கோலத்தில் நீங்க அருள் புரியும் தெய்வமும் பதினெட்டாம் படி கருப்பசாமியே!

வாழ்வில் ஒருமுறையாவது அழகர்மலை சென்று எம்பெருமானையும், காவல் தெய்வத்தையும் வணங்கி வருவோம். வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.

18-ஆம் படி கருப்பனை வழிபட்டால்

  1. வாழ்வில் நல்லவர்கள் நட்பு கிடைக்கும்.
  2. வழக்குகளில் வெற்றி கிட்டும்.
  3. பேசும் தெய்வமாய் நம்முடன் இருந்து நமக்கு அருள் புரிந்திடுவார்.
  4. பில்லி, சூனியம், ஏவல், எல்லாம் நம்மை அண்டாது.
  5. வாகனங்களில் செல்லும்போது ஆபத்து நேராமல் இருக்க அருள் புரிவார்.
  6. வறுமை நீங்கும்; வளமான வாழ்வு அமைந்துவிடும்.
  7. மன தைரியம் உண்டாகும்.
  8. தீராத நோய்கள் தீர்ந்துவிடும்.
  9. குல விருத்தி உண்டாகும்.
  10. மழை தந்து வளம் தந்துவிடுவார்.
  11. சகல் ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.