விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடும் கோயில்!
திருப்பூரில் அவிநாசி என்ற ஊரில் உள்ள கோயில் அவிநாசியப்பர். இந்தக் கோயிலில் அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர்) மூலவராக காட்சி தருகிறார். கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சித்திரையில் பிரம்மோற்சவம், மிருகசீரிட நட்சத்திர நாளில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கோயிலின் தல விருட்சமான பாதிரிமரம் பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. மற்ற காலங்களில் இது பூக்காது. மைசூர் மகாராஜா வம்சத்திற்கும், இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்து வந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பே ஏற்பார்களாம். இத்தலத்திற்கு அருகிலேயே திருமுருகன்பூண்டி கோயில் இருக்கிறது. கோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள் புரிகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற படைப்புச்சிற்பம் உள்ளது. 63 நாயன்மார் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.
இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனி பகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசிக்கு சென்று வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட கிடைக்கும். இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசை அன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அந்த நாளில் கோயிலில் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும்.
விநாசம் என்பதற்கு அழியக் கூடியது என்பது பொருள். இத்துடன் அ சேர்த்தால் அவிநாசி எனப்படும். இது அழியாத்தன்மை கொண்டது எனப்படும். வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தல புராணம் சொல்கிறது. அவர் சனி பகவானை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்களை தந்தருள்வார்.
இடதுகாலை பீடத்திலும் வலது காலை காகத்தின் மீது வைத்தும் மேல் வலது கையில் அம்பும் இடது கையில் வில்லும் கீழ் வலது கையில் சூலமும் இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார். இந்தக் கோயிலில் தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.
சிவனுக்கும், அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும் கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தவாறு அருளுகிறார். தியானம், பூஜை முறை தெரியாதவர்கள் மனம் உருகி சிவனையும், அம்மனையும் வழிபட கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல இறைவன் திருடனுக்கும் முக்தி கொடுத்துள்ளார். பைரவருக்கு அருகில் வியாதவேடர் என்ற திருடனுக்கு தனி சன்னதி உள்ளது.
சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது. கருணாம்பிகை சன்னதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். தேள்கடி, விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சன்னதியில் வழிபட்டு பிரசாதம் பெற்று செல்கின்றனர்.
64 பைரவ முகூர்த்த்த்தில் இத்தல பைரவர் ஆகாச காசிகா புரததனாத பைரவர் எனப்படுகிறார். இவர் காசியிலுள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தல புராணம் கூறுகிறது. இவர், உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.
கோயில் பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
சுந்தரர் இந்த ஊரில் உள்ள தெருவின் வழியே உள்ளே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில் ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும் மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில் இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும் அதில் இவர்களது பையனை இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடந்திருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணம் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடக்கிறது.