அறுபடை வீடு ரகசியம் தெரியுமா?
ஞானிகளின் குருவான முருகப் பெருமானுக்கு அறுபடை வீடு அமைத்ததற்கான காரணம் என்னவென்று தெரியுமா? பொதுவாக மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் அவசியம். ஆனால், சித்தர்களோ நல்ல உடல் ஆரோக்கியம், ஆளுமை, ஞானம், பொருளாதாரம், உறவுகள் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
அவற்றை பூர்த்தி செய்யும் இடங்களில் முருகன் கோயில்கள் ஆறுபடை வீடாக அமைக்கப்பட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுகளுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார தேவைக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய கோயில்களுக்கு சென்று தரிசிக்கலாம்.
அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? அரசர்களிடம் சென்று அவர்களையும், அவர்களது ஆட்சி முறையையும் புகழ்ந்து பாடி பரிசு பெறுவது புலவர்களது வழக்கம். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமும் சென்று விவரம் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாக எழுதுவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர். பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.
தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான். ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளடைவில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன. நக்கீரர் ஒவ்வொரு ஊர்களையும் இந்த வரிசையில் பட்டியலிடுகிறார்.
முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
2ஆம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3ஆம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
4ஆம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
5ஆம் படைவீடு – குன்றுதோறாடல் (திருத்தணி)
6ஆம் படைவீடு – பழமுதிர்ச்சோலை
கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.
காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான். அப்படி குமரன் குடியிருக்கும் ஆற்றுப்படை வீடுகளுக்கு சென்று குமரனின் அருள் பெறுவோம்.