சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை!
சனி பகவானின் திருவிளையாடல்கள் பற்றி சில கதைகளில் இதுவும் ஒன்று. மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற் கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களை கொடுத்து, “இதற்கு என்ன விலை கொடுக்கலாம்? மதிப்பு போட்டுச் சொல்லுங்கள்” என்றான்.
மன்னன் கொடுத்தவற்றை பெற்றுக் கொண்ட பொற்கல்லர், இவற்றை சோதித்து, மதிப்பு நிர்ணயித்த பின்பு நாளை வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம் என்பதால், தனது வீட்டு சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில் தன் கையில் இருந்த ரத்தினக் கற்களை திருப்பித் திருப்பி பார்த்தார்.
விளக்கு மாட சுவரின் மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென்று அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அந்த கொக்கானது அவர் கையில் வைத்திருந்த ரத்தினங்களை கொத்தி விழுங்கிவிட்டு மீண்டும் சித்திரம் போன்றே மாறியது. இதனால், அதிர்ச்சியுற்ற பொற்கல்லர் பஞ்சாங்கம் மற்றும் ஜாதகத்தை எடுத்து பார்த்தார்.
அதன் பிறகு தான் அவருக்கு தெரிய வந்தது. அதாவது, அன்று முதல் அவருக்கு ஏழரை ஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிய வந்தது. கொக்கு ரத்தினங்களை விழுங்கிவிட்ட சென்றதை மன்னர் நம்புவாரா? என்று யோசித்து வருத்தப்பட்டுக் கொண்டே காட்டுக்கு சென்றுவிட்டார்.
அடுத்தநாள், மன்னர் கொடுத்த ரத்தினங்களுடன் பொற்கொல்லர் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். மக்கள் இவ்வாறு பேசிய செய்தி மன்னரது காதுக்கும் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த மன்னர், பொற்கொல்லரின் மனைவி மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தான். மேலும், பொற்கொல்லரை பிடிக்க காவலாளிகள் காட்டுக்கு சென்றனர். எனினும், ஏழரை ஆண்டுகளாக அந்த பொற்கொல்லரை பிடிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ஏழரை சனி முடியும் நேரமும் வந்தது. ஏழரை ஆண்டுகளாக பசியோடும், பட்டினியோடும் காட்டுக்குள் வாழ்ந்து வந்ததால், அந்த பொற்கொல்லர் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அதன் பின்னர் தனது வீட்டுக்கு வந்தனர். குளித்து முடித்து சனி பகவானை வேண்டிக் கொண்டு சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தை கக்கு என்றார்.
என்ன ஆச்சரியம், அந்த சித்திரத்துக் கொக்குக்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவரில் சித்திரமாகவே மாறியது. இதையெல்லாம் மறைந்து மாறுவேடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மன்னன், பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு, அவருக்கு தனது நாட்டின் முதல்வர் பதவி கொடுத்தார்.
அவரது மகளையும் மணந்து கொண்டான். ஏழரை சனி மூலமாக ஒருவர் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை இந்தக் கதையின் மூலமாக உணர்ந்திருக்கலாம். ஏழரை சனி முடியும் தருவாயில் உங்களது ஜென்ம ராசிக்கு 3ஆம் இடத்திற்கு வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே சனி பகவான் நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார். இதைத்தான் சனியைப் போன்று கொடுப்பாரும் இல்லை, சனியைப் போன்று கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள்.