குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!
நாகப்பட்டினம் மாவட்டம் தலைச்சங்காடு என்ற ஊரில் உள்ள கோயில் சங்காரண்யேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சங்காரண்யேஸ்வரர் மூலவராகவும், சோமாஸ்கந்தர் உற்சவராகவும் திகழ்கின்றனர். சவுந்தர நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் 5 நாள் திருவிழா நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனை நடக்கிறது. இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.
பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர். எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என்று பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும். சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாக பயிரிட்டு இவ்வூர் கோயில்களுக்கும் இதனை சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டத்தை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் என்று கல்வெட்டு செய்தி கூறுகிறது.
குழந்தை பாக்கியம் கிடைக்க பெண்கள் பௌர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து அலங்கரித்து பார்க்கிறார்கள்.
கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது. ஒரே சிவன் கோயிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும், பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள் பாலிக்கின்றனர். உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள்.
கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஏராளமான சிவாலயங்கள் கட்டியுள்ளான். அதில் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்ட கோயில்களும் கட்டியுள்ளான். அப்படிப்பட்ட மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதி நடுவில் முருகன் சன்னதி வலப்பக்கம் அம்மன் சன்னதி என்று அமைக்கப்பட்டிருக்கும்.
திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது. இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம், வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.
மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால், இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு.