குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

141

குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி என்ற ஊரில் உள்ள கோயில் திருமுருகநாதர் கோயில். இந்தக் கோயிலில் திருமுருகநாதர் மூலவராக காட்சி தருகிறார். ஆவுடை நாயகி, மங்களாம்பிகை, ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கோயில் நுழைவு வாயிலில் 11 கால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது.

சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சன்னதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மன உருகி சுவாமியை வேண்டிக் கொள்ள மன நோய், (சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்முக தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

வேண்டிக் கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால்குடம், காவடி எடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்து வழிபடுகின்றனர். சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்த போது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடு விநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார்.

அப்போது தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், தனது பூத கணங்களை வேடுவர் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச் செய்தார். இதனால், மனக்கலக்கமற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும் படி முறையிட்டார். தனது தகப்பனின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார்.

அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருளை மீட்டுத் தரும்படி வேண்டினார். அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் என்ற பெருமையை உடையது.

இத்தலத்தில் முதன்மையானவரான சிவபெருமான், முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால் திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன் தனது வேலை கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல் தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டு பாடியபோதும் பின்னர், பொருளை திரும்ப பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது.

கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்மதீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயாசம் செய்து பசும்பால் கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து அந்தணர்களுக்கு தானமும் செய்தான்.

அதன் பயனாக அவன் இரட்டை குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், நீலகண்டி என்ற திருநாமத்துடன் காவல் தெய்வமாக அருள் பாலிக்கிறாள். ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கு ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தி வந்தான்.

அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும் சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும் சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார். அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீர் எடுத்து சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி தோஷம் தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுர்க்கல்லாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.