கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

128

கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

மாதவி வனேஸ்வரர் கோயில் திருமுருகன்பூண்டி என்ற ஊரில் உள்ளது. இந்தக் கோயிலில் மங்களாம்பிகை தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூலவராகவும், உற்சவராகவும் மாதவி வனேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முல்லை தான் இங்கு தல விருட்சமாக விளங்குகிறது. கயிலாய மலையைப் போன்று இங்கு வாசலில் நந்தி இருப்பதால், இந்தக் கோயிலுக்கு சென்று வருபவர்கள் கயிலாயத்திற்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.

விஷ்ணு பகவான் பாற்கடலில் கடைந்த அமிர்த்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார். அப்போது தேவர்களுடன் இணைந்து அசுரன் திருட்டுத்தனமாக அமிர்தத்தை அருந்தினான். இதையறிந்த விஷ்ணு பகவான் அசுரனை இரண்டாக பிளந்தார். ஆனால், பாற்கடலில் கடைந்த அமிர்தத்தை பருகியதால் அவனது உயிர் போகவில்லை. அசுரனின் தலைப்பாகம் ஒரு பாம்பின் உடலுடன் சேர்ந்து ராகுவாகவும், உடல் பாகம் பாம்பின் தலையோடு சேர்ந்து கேதுவாகவும் மாறியது. இதில் கேது பூலோகத்திலுள்ள மாதவி வனத்தில் தங்கி சிவனை வழிபட்டதன் பலனாக கிரகப்பதவியை அடைந்தது. கேது பகவான் பூஜித்த சிவபெருமானே, இத்தலத்தில் மூலவராக விளங்குகிறார்.

கேது பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக செவ்வரளி மாலை அணிவித்து 7 முறை சுற்றி வழிபடுகின்றனர். தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். மாலாதரன் என்ற வேடன் முல்லை வனமாகிய இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தான். காட்டில் பூத்த முல்லை பூக்களைத் தொடுத்து மாலையாக்கி தன் கழுத்திலும், மனைவியின் கழுத்திலும் அணிந்து கொள்வான்.

அடுத்த நாள் காலையில் அதனை தூக்கி எறிந்துவிடுவது வழக்கம். அப்படி அவர்கள் இருவரும் வீசிய மாலையானது அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்து வந்தன. அறியாமல் செய்த இவர்களது புண்ணியத்தால் அவர்கள் இருவரும் மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களே இங்கு கோயில் கட்டினர். மாதவி (முல்லை) வனத்தில் இருந்ததால் இத்தல இறைவனுக்கு மாதவி வனேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. மங்களாம்பிகை தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.