திருமணத் தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி என்ற ஊரில் உள்ள கோயில் மகுடேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மகுடேஸ்வரர் (மலை கொழுந்தீஸ்வரர்) மூலவராக காட்சி தருகிறார். வன்னி மரமே தல விருட்சமாக விளங்குகிறது. திருப்பாண்டிக்கொடுமுடி என்பதே இந்த ஊரின் புராணப் பெயராக உள்ளது.
மகுடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. ஆடிப்பெருக்கென்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்களாம். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தின் வயதைக் கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால், காய் காய்க்காது.
ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டு தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது. ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கிறார்கள்.
ஒருவருக்கு எத்தனை வயதாகிறதோ, அத்தனை குடம் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும். நாக தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக பூஜை செய்து வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.
வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலைச் சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறது.
இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள் பாலிக்கிறார். வன்னி மரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜ் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி தந்தார்.
ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர் வழிபாடு விசேஷம். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதற்காக வடக்கி நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.
இங்கே மகுடேஸ்வரர் மலை கொழுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சௌந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கின்றனர். ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர்.
ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி சிறு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம். இது ஒரு நாகர் ஸ்தலம் என்பதால், நாக தோஷ நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.