நாகதோஷம் நீங்க சென்று வர வேண்டிய கோயில்!

179

நாகதோஷம் நீங்க சென்று வர வேண்டிய கோயில்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோயில் நாகராஜசுவாமி கோயில். இந்தக் கோயிலில் நாகராஜர் மூலவராக காட்சி தருகிறார். ஓடவள்ளி தலவிருட்சமாக விளங்குகிறது. தை மாதத்தில் பிரம்மோற்சவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை,  கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். நாகதோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடும் பிரார்த்தனை தலமாக இந்தக் கோயில் சிறந்து விளங்குகிறது. கோயிலில் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர், கன்னிமூல கணபதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். பிரகாரத்தில் காவல் தெய்வமான நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் சன்னதிகள் உள்ளன.

நாகதோஷம், ராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் நாகராஜருக்கு பால் பாயசம் படைத்து, பாலபிஷேகம் படைத்தும், கோயில் வளாகத்தில் நாக பிரதிஷ்டை செய்தும் நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என்று ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபாடு செய்கிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது.

புழுதியில் சென்றாலும் நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும் அதில் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என்று எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும், என்பதை நாகம் உணர்த்துகிறது.

மூலஸ்தானத்தில் நாகராஜர், 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும் , பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவார பாலகர்களாக இருப்பர். ஆனால், இந்தக் கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும். பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளன.

நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவார பாலகர்களாக அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில் நாகக்கன்னி சிற்பி வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும் இவையே இந்தக் கோயிலை பாதுகாப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் ராமனாக அவதாரம் எடுத்த போது தம்பி லட்சுமணராக பிறந்தார். எனவே லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது.

ராகு மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கின்றனர். இதுதவிர தினந்தோறும் காலை 10 மணிக்கு பால் அபிஷேகம் நடக்கும். நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால் பாயாசம் படைத்தும் வழிபாடு செய்கின்றனர். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நிவர்த்திக்கடன் செலுத்துவது உண்டு.

கோயிலில் மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்கும் இடம் மணம் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால் இந்த இடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலே கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.

ஆவணி மாதம் மழைக்காலம் என்பதால், இந்தக் காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக் கூடாது, என்பதற்காக அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். மேலும், நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகமும் செய்வதுண்டு.

ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாட்டிற்குரிய காலமாகவும் கருதப்படுகிறது. கேரள முறைப்படி இந்தக் கோயிலில் வழிபாடு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

நாகராஜர் சன்னதிக்கு வலப்பறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர், கன்னிமூல கணபதி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதலில் நாகராஜருக்கு பூஜை செய்த பின்னரே காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர் ஆகியோருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. கோயிலில் பிரதான மூலவர் நாகராஜராக இருந்த போதிலும் அனந்த கிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்சவமும் இவருக்கே நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருநாள் அன்று இவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி விழாவும் இவரது சன்னதியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக பெருமாள் கோயிலில் கொடிமரத்தின் உச்சியில் கருடனை வடிவமைப்பர்.

ஆனால், இங்குள்ள அனந்த கிருஷ்ணர் கொடிமரத்தின் உச்சியில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடிவமைத்துள்ளனர். கருடன் மற்றும் பாம்பு இருவரும் ஒருவருக்கொருவர் விரோதிகள் என்பதால் கருடனை வடிவமைக்கவில்லை. அதற்குப் பதிலாகத்தான் ஆமையை வடிவமைத்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்ய நட்சத்திர நாளிலும், விசேஷ காலங்களிலும் அனந்த கிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது விஷ்ணு பகவான் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் இங்கு ஆமையை வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது.

இது கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக சொல்லப்படுகிறது. இந்த வாசலை மகாமேரு மாளிகை என்று அழைக்கின்றனர். அதாவது, மாளிகை போன்ற உயரமான வாசல் கொண்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. நாகராஜர் சன்னதியின் இடது புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது.

ஓடவல்லி என்னும் கொடி இத்தலத்தின் விருட்சம். தற்போது இந்த கொடி இல்லை என்று சொல்லப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இதில் பூக்கும் நாகலிங்க பூவை நாகராஜரின் குறியீடாக கருதி வழிபாடு செய்கிறார்கள். கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி இருக்கிறது. இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை தீர்த்த துர்க்கை என்று அழைக்கின்றனர்.

ராகு மற்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபாடு செய்கிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை அம்மச்சி என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம். இந்த துர்க்கையையும் தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, அம்மச்சி துர்க்கை என்று அழைக்கிறார்கள்.

பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அந்த வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக் கண்டு பயந்த அந்தப் பெண் ஊருக்குள் சென்று மக்களிடம் தெரிவித்தாள். அவர்கள் இங்கு வந்து பார்த்த போது நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இதையடுத்து நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய அளவிலான சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழந்த மன்னர் இங்கு பெரிய அளவிலான கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், நாகர்கோவில் என்றே பெயர் வந்துள்ளது.

தமிழகத்தில் நாகர் என்று சொல்லப்படும் பாம்பு வழிபாட்டிற்குரிய பெரியகோயில் அமைந்த ஊர் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.