ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய  எளிய பரிகாரம்!

299

ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய  எளிய பரிகாரம்!

நாகப்பட்டினம் மாவட்டம் மேலத்திருமணஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோயில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் லட்சுமி நாராயணப் பெருமாள் மூலவராகவும், வரதராஜர் உற்சவராகவும் திகழ்கின்றனர். ஸ்ரீ தேவி, பூதேவி லட்சுமி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, கருட ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஐந்து தலை நாகர், ராமானுஜர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி வழிபட சத்ருபயம் நீங்கும்.

ராகு தோஷம் உள்ளவர்கள் ஐந்து தலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாற்றி சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர். பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் பெருமாள் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார்.

தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த போது மைத்துனராக விஷ்ணு பகவான் திருமணத்தை நடத்தி வைக்க மேற்கு நோக்கி அமர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. இவர், லட்சுமி தாயாரை மடியில் தாங்கிய கோலத்தில் சேவை செய்கிறார். இந்தக் கோயிலில் உள்ள வரதராஜப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக காட்சி தருகிறார். இவரை வழிபட மணவாழ்வு கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

கையில் அமிர்தகலசம் தாங்கிய நிலையில் வடக்கு நோக்கி தன்வந்திரி தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நீண்டகாலம் நோயால் பாதிக்கப்படுபவர்கள் இவருக்குரிய அஸ்தம நட்சத்திரம் புதன் கிழமைகளில் மூலிகைத் தைலம் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவருக்கு நெய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வர ஆரோக்கியம் மேம்படும்.

கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்த தலம் மேலத்திருமணஞ்சேரி. பசுவாக பிறக்கும்படி சாபம் பெற்ற பார்வதி தேவி பூலோகம் வந்தாள். அப்பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணு உடன் வந்தார். சாப விமோசனம் பெற்று அம்பிகை சிவனை திருமணம் செய்த போது உடனிருந்து திருமண வைபவத்தை  நடத்தி மகிழந்தார். அத்துடன் அதே தலத்தில் தன் மனைவி லட்சியுடன் கோயில் கொண்டார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், கல்யாண சுந்தரர் கோயில் அருகில் அமைந்துள்ளது. திருமண விழாவிற்கு வருகை தந்த தேவர்களை விஷ்ணு பகவான் எதிர்கொண்டு வரவேற்றார். இதனால், அந்த இடம் எதிர்கொள்பாடி என அழைக்கப்படுகிறது. சிவபார்வதி கல்யாண உற்சவத்திற்கு சீர்வரிசைகள் இன்றும் எதிர்கொள்பாடியாலிருந்து எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.