ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

173

ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் ஒண்டிப்புத்தூர் என்ற ஊரில் உள்ள கோயில் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். சுயம்வர பார்வதி தேவி, மீனாட்சியம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் மேற்கு பார்த்த முருகன் காட்சி தருகிறார். பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியக் கதிர்கள் பட்டு சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது. கோயிலில் உள்ள துர்க்கையை வழிபட ராகு தோஷம் நீங்கி திருமண தடைகள் நீங்கும்.

மாங்கல்ய தோஷம், திருமண தடை நீங்க இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட்டு வரம் பெறுகின்றனர். நீண்ட ஆயுளுக்காக 60 வயதானவர்களுக்கு சாந்தி வழிபாடு (ஆயுள் ஹோமம்) செய்யப்படுகிறது. இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சௌந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.                                ,

சங்க காலத்தில் இந்தப் பகுதியானது பொன்னூர், மண்ணூர் என்று இரு பிரிவாக இருந்ததாகவும், ஆகையால் இருகூர் என்றானதாகவும் இருளர் தலைவன் இருவன் பெயரில் இருவூர் என்று இருந்து இருகூர் என்றானதாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. லிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும் வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும் பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில் தண்டத்துடன் ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார்.

கோயிலில் பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தேன் வண்ண பாண லிங்கமாக கிழக்கு நோக்கி சவுந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் 4 திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் உள்ளது. கோயிலில் உள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது.

கரிகாற்சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் உள்ள 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பதி செய்ததாக வரலாறு கூறுகிறது.