வாய் பேச முடியாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!
ஈரோடு மாவட்டம் கோபி என்ற ஊரில் உள்ளது ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழா நடக்கிறது.
வாய் பேச முடியாதவர்களுக்கு பேச வைக்கும் திறனை கொடுக்கவும், தீராத நோய்களை தீர்க்கவும், தினந்தோறும் 3 கால நெய் அபிஷேக பூஜைகள் ஐயப்பனுக்கு செய்யப்படுகிறது. இந்த அபிஷேகம் செய்யப்பட்ட நெய்வேத்தியம் பக்த்ரகளுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மன அமைதியும், தீராத நோய்களும் தீர வழிவகை கிடைக்கிறது. இந்தக் கோயிலின் பிரகாரத்தில் முதலில் விநாயகர் இருக்கிறார். பின் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாளும் தும்பிக்கை ஆழ்வாரும், கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்த ஐயப்பன் கோயிலி முருகப் பெருமானும், ஈஸ்வரனும் எதிரெதிரே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் இருக்கும் மஞ்சள் மாதா சன்னதியானது மிகவும் பிரசித்தி பெற்றது. வாய் பேச முடியாதவர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அவர்களுக்காக இந்தக் கோயிலில் வேண்டப்படுகிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் இடது வலது பக்கங்களில் சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து ஐயப்பன் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வழிநடத்தி இருமுடி கட்டி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
இந்த மண்டபத்திற்கு அருகில் நாகராஜர் சன்னதியும், மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும் உள்ளன. மேலும், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பாலமுருகன், நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள கடும் தவம் புரிந்த மஞ்சள் மாதா சன்னதி இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது போன்று வீணா தட்சிணாமூர்த்தி இந்த கோபி ஐயப்பன் கோயிலிலும் வீற்றிருந்து ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் பக்தர்களை காத்து நின்று அவர்களுக்கு அருள் புரிகின்றார். கடந்த 1977 ஆம் ஆண்டு ஐயப்ப சமாஜம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1981 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த 2000 ஆம் ஆண்டில் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.