ஐந்தெழுத்து என்பது என்ன?
தமிழில் ஓர் அதிசயம் உண்டு. உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என பிரித்து சொல்வார்கள். அதாவது கசடதபற – வல்லினம், ஙஞணநமன – மெல்லினம், யரலவழள – இடையினம் என்று குறிப்பிடுவார்கள்.
ஓம் நமசிவாய…..
ந – நிலம்
ம – நீர்
சி – நெருப்பு
வ – காற்று
ய – வானம்
இது ஒரு அற்புதமான சேர்க்கை…. மேலே நாம் கண்ட ந ம சி வ ய எழுத்துக்கள். இதில் முதல் இரண்டும் மெல்லினம். மத்தியில் ஒரேழுத்து மட்டும் வல்லினம். இறுதி இரண்டு எழுத்தும் இடையினம்.
வல்லின எழுத்து அக்னியை குறிக்கும் ’சி’. வல்லின மெல்லின இடையின எழுத்துக்களில் உள்ள உயிர்த்தன்மையை கண்டு அதனை கொண்டே நமசிவய எனும் திரு ஐந்தெழுத்து மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்செயலாக ஏற்பட்டது அல்ல.
தேவர்களும், ஞானிகளும், ரிஷிகளும், மகா முனிவர்களும் இறைத்தன்மையை உணர்ந்து ஏற்படுத்திய உன்னத சொல். இயற்கையெனும் இறைவனாரை ஒரே சொல்லில் அழைக்க இந்த திருவைந்தெழுத்து மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டே இந்த பஞ்சாட்சரம் உருவாக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்து தியானித்து கவனித்தால் புரியும்.
நிலமும் நீரும் ஒருபுறமும், காற்றும் வெளியும் மறுபுறமும் இருக்க நெருப்பு மத்தியில் உள்ளதாக அமைந்துள்ளது. எவ்வளவு அற்புதமான அமைப்பு பாருங்கள்….
நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும். வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும். நெருப்பு தனித்தன்மை வாய்ந்தது. அதனால் அது மத்தியில் இரண்டையும் சமநிலையில் கொண்டு அமைந்துள்ளது.
இதனை மனிதனின் உடலில் உள்ள காற்று நீர் வெளி மண் நெருப்போடு இணைக்கும்போது மனிதன் அசாத்திய பலவான் ஆகின்றான். காற்று, மண், நீர், வெளி, நெருப்பு இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லக்கூடுமோ. ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், முன்னோர்களும் இதனை பஞ்ச பூதங்கள் என்றனர்.
மனிதர்கள் எல்லோருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை. ஒன்று கூட்டியும் ஒன்றை குறைத்தும் இறைவனார் படைத்துள்ளார். ஆகவேதான், மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருப்பதில்லை.
சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.
சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள்.
சிலர் குணக்குன்றாக இருப்பார்கள்.
சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள்.
சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள்.
இதற்கெல்லாம் காரணம், இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான்.