மதுரை கள்ளழகர் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் தோசை சுடுவது எப்படி?

173

மதுரை கள்ளழகர் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் தோசை சுடுவது எப்படி?

வீட்டில் பூஜை செய்யும் போது நமக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து இறைவனுக்கு படைக்கிறோம். ஆனால், கோயில்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த கோயில்களுக்கு என்று உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரி செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கோயில்களில் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அரவாணை பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருவாரூர் தியாகராஜ பெருமாளுக்கு நெய் முறுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமாக பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் குலசேகரன்படியை தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது என்னவோ தயிர்சாதம் மட்டும்தான். சுக்கிரனுக்குரிய ஸ்தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

கேரளா மாநிலத்திலுள்ள மகாதேவர் கோயிலில் மூலிகைகளை சாறு பிழிந்து அதனை பாலுடன் கலந்து ஈசனுக்கு படைக்கப்பட்டு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு இட்லி நைவேத்தியமாக படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள சத்ய நாராயணருக்கு கோதுமை ரவை அல்வா பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மிளகோதரை பிரசாதம் கொடுக்கப்படுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் மோதகம் பிரசாதம் தரப்படுகிறது. இப்படி ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

இந்தப் பதிவில் மதுரை கள்ளழகர் கோயிலில் கொடுக்கப்படும் தோசை பிரசாதம் எப்படி செய்வது என்று காண்போம். பொதுவாக வீடுகளில் தோசை ஊற்றுவது வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில் சற்று வித்தியாசம்.

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1 கப்
  2. கறுப்பு உளுந்து – ¼ கப்
  3. உப்பு, நெய் – தேவைக்கேற்ப
  4. கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
  5. பெருங்காயத்தூள், சுக்குத்தூள் – ¼ ஸ்பூன்
  6. மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து, தண்ணீரை வடித்து நைசாக அரைத்து சலிக்க வேண்டும். அதன் பிறகு கறுப்பு உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து அப்படியே அரைக்க வேண்டும். சீரகம், மிளகை கரகரப்பாக இருக்கும்படி பொடிக்க வேண்டும். அரிசி மாவு, அரைத்த உளுந்து, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலக்க வேண்டும். ஒரு ஸ்பூன் நெய்யில் சுக்குத்தூள், பெருங்காயத்தூள், சீரகம், மிளகுத்தூள் சேர்த்து பொரித்து மாவில் சேர்க்க வேண்டும். 2 மணி நேரத்திற்குப் பிறகு தோசைக்கல்லில் சிறிய சிறிய தோசைகளாக ஊற்ற வேண்டும். அதன் மேலும், சுற்றிலும் நெய் சேர்த்து ஒருபுறம் வேக வைத்த பிறகு மறுபுறமும் வேக வைக்க வேண்டும். இருபுறமும் நன்றாக வேக வைத்த பிறகு தோசை எடுத்து சாப்பிடலாம்.

மதுரையில் உள்ள கள்ளழகர் கோயிலில் இது பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.