கழுகுமலை கழுகாசலமூர்த்தி முருகன் கோயில் – புராணக் கதைகள்!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை என்ற ஊரில் உள்ள கோயில் கழுகாசலமூர்த்தி கோயில் அல்லது முருகன் கோயில். இந்தக் கோயிலில் கழுகாசலமூர்த்தி (முருகன்) மூலவராக காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் திருநாளின் போது வசந்தமண்டபம் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டியில் 13 நாட்களும், தைப்பூசத்தில் 10 நாட்களும் பங்குனி உத்திரம் 13 நாளும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்தல இறைவன் கழுகாசலமூர்த்தி மேற்கு பார்த்தும் வள்ளி தெற்கு பார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள் பாலிக்கிறார்கள். திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர், குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் 3 என்றும், அதில், ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் மலையை குடைந்து கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான். இந்த குடவரைக் கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இந்தக் கோயிலை சுற்றி வர வேண்டுமானால், மலையையே சுற்றி வர வேண்டும். இத்தல இறைவனுக்கு முகம் ஒன்று, கரம் ஆறு, தனது இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலை தொங்கவிட்டவாறும் கையில் கதிர்வேலுடன் காட்சி தருகிறார்.
மற்ற கோயில்களில் அசுரன் தான் மயிலாக இருப்பான். ஆகையால் மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடது பக்கமாக இருக்கும். ஆகையால், சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும் (செவ்வாய்) இருப்பது சிறப்பு.
எனவே இந்தக் கோயிலை குரு மங்கள ஸ்தலம் என்று கூறுகிறார்கள். கழுகாசலமூர்த்தியை தினந்தோறும் அகத்திய முனிவர் பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகனுக்கு தனி பள்ளி அறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளி அறையும் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
ஜடாயு ராவணனால் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஜடாயு ராமனால், இறுதி காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் (பிறவிப்பயன்) பெற்றார். இதனை அனுமன் மூலமாக அறிந்து கொண்ட ஜடாயுவின் சகோதரன் சம்பாதி என்ற கழுகு மகமுனிவர், ராமனிடம் தன்னால் தனது சகோதரனுக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் போயிற்று. இதனால், தனக்கு ஏற்பட்ட சாபம் எப்போது தீரும்?
எங்கு போய் இதனைக் களைவது? என்றார். அதற்கு ராமன், நீ கஜமுகபர்வத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும் என்றார். அதன் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. முனிவர் கஜமுகபர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்போது முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்வதற்காக இந்த வழியாக வந்துள்ளார். அந்த நேரத்தில், மக்களையும், முனிவர்களையும் சூரபத்மனின் சகோதரன் தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
இதையடுத்து முருகப் பெருமான் ஐப்பசி பஞ்சமி திதியன்று தாரகாசூரனை வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு சம்பாதி தங்கும் இடம் அளித்தார். அதோடு சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மனமகிழ்ந்த முருகப் பெருமான் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதையடுத்து, தனது சகோதரனுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாத சம்பாதியின் பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் கழுகுமலை என்று பெயர் பெற்றது.