கெளரவர்கள் நூறு பேரா? யுயுத்சு யார்? பார்ட் 2!
மேலும் படிக்க: கௌரவர்கள் எத்தனை பேர்? பகுதி – 1!
முதலில் இதனை படித்து முடித்துவிட்டு 2ஆம் பகுதியை படிக்க தொடங்கவும்….
கண்ணன்: பீஷ்மர் பெரும் வீரராக இருக்கலாம். ஆனால், முக்காலமும் உணர்ந்தவரல்லர் அல்ல என்று அர்ச்சுனனிடம் கூறினார்.
அர்ச்சுனன்: ஏன் அப்படி சொல்கிறாய்?
கண்ணன்: நமது அணியில் சேர வருவதோ அவன் ஒருவன் தான். அவனும் கொல்லப்படுவான் என்று பீஷ்மர் கூறுகிறாரே. உயிரி பிழைத்திருக்கப் போகும் ஒரே கௌரவ வீரன். அவன் சாதாரணப் படை வீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்.
அர்ச்சுனன்: என்ன சொல்கிறாய் கண்ணா, அந்த வீரன் கௌரவர்கள் நூறு பேரில் ஒருவனா?
கண்ணன்: கௌரவர்கள் மொத்தம் நூற்றியொரு பேர். நம் அணியில் சேர வருபவன் நூற்றியொரு பேரில் ஒருவன்.
அர்ச்சுனன்: இதுவரை கௌரவர்கள் நூறுபேர் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.
கண்ணன்: இந்த நூற்றியொராவது கௌரவனுக்கு, அவர்கள் உரிய கௌரவம் கொடுக்கவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் அதனை பிறகு சொல்கிறேன். நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு. இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சொல்கிறேன்.
கண்ணன்: யுத்தம் தொடங்கவிருக்கிறது அர்ச்சுனா. நான் தேரைச் செலுத்தப் போகிறேன். நீ காண்டீபத்தை எடுத்துக்கொண்டு தயாராகு.
தங்கள் அணிக்கு வந்து சேர்ந்த கௌரவனைப் பற்றிய நினைப்பு அர்ச்சுனன் மனதிலிருந்து முற்றிலும் விலகியது. அவன் போரிடத் தயாரானான்…
சூரியன் அஸ்தமனம் ஆனதும் முதல்நாள் போர் அதோடு, முடிவடைந்தது. மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.
பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் கண்ணன். பஞ்ச பாண்டவர்கள் மட்டுமல்ல, அங்கே அவர்களது மனைவி பாஞ்சாலியும் தாயார் குந்தி தேவியும் கூட அமர்ந்திருந்தார்கள்.
யுத்தம் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை குந்தியின் மனதில் கவலைரேகை படர்ந்திருந்ததை அவள் முகம் கண்ணனுக்கு தெரிவித்தது. தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த பாஞ்சாலியின் கண்கள் தன்னை அவமானபடுத்திய துச்சாதனன் மேலும் துரியோதனன் மேலும் கொண்ட தாளாத கோபத்தால் சிவப்பேறியிருந்தன.
குந்திதேவி கண்ணனை வரவேற்றாள். பாஞ்சாலியும் தனது இன்முகம் பொங்க அழைத்தாள். தன்னுடன் வந்த கௌரவ வீரனைப் பிரியமாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் கண்ணன். குந்தி, கண்ணன் அழைத்து வந்த இளைஞனை தீவிரமாக ஆராய்ந்தாள்.
கண்ணனே அழைத்து வந்திருப்பதால் மிக முக்கியமானவனாகத்தான் இருக்க வேண்டும். யார் இவன் தாயார் கண்களாலே கேள்வி கேட்டாள். இவன் கௌரவர்களில் ஒருவன்! இதைக் கண்ணன் சொல்லி முடிப்பதற்குள் பாஞ்சாலியின் சிவந்த கண்கள் மேலும் கூடுதலாகச் சிவந்தன. கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியானாள்.
இவன் கௌரவர்களை விட்டு விலகி நம் அணிக்கு வந்துவிட்டான். உண்மையான தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று நம் அணிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன் அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான். புதியவன் குந்திதேவியின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான்.
குந்தி அவனைப் பிரியமாய்ப் பார்த்து மனமார ஆசீர்வதித்தாள். பாஞ்சாலியின் விழிகளில் மகிழ்ச்சி தோன்றியது. ‘உன் பெயர் என்ன மகனே? குந்தி ஆதரவுடன் கேட்டாள். அவன் கம்பீரமாக பதிலளித்தான். தர்மநெறி பிறழாமல் வாழும் ஐந்து புதல்வர்களைப் பெற்ற பாக்கியசாலியான அன்னையே! என்னை யுயுத்சு என்று அழைப்பார்கள்!
யுயுத்சு! குந்தியின் மனம் அந்தப் பெயரைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தது. ஆம். காந்தாரி இவன் பெயரை ஒருமுறை குறிப்பிட்டு இவனைப் பற்றித் தன்னிடம் அங்கலாய்த்திருக்கிறாள். பல காலம் முன்னால் நடந்த சம்பவம் காந்தாரி அன்று இவனைக் குறித்து அங்கலாய்த்தது ஏன் என நினைவில்லை.
காந்தாரிக்கு இவனைப் பிடிக்கவில்லை என்ற உண்மை மட்டும் இன்றும் மனத்தில் தேங்கியிருக்கிறது. அதுசரி. உண்மையில் யார் இவன்? அனைவர் கண்களும் அவனையே பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, அர்ச்சுனன் குரல். ‘‘கண்ணா! இவன் கௌரவர்களில் ஒருவன் என்றாய். மற்ற கௌரவர்களால் இவன் உரிய மதிப்புடன் நடத்தப்படவில்லை என்றும் சொன்னாய். இப்போது சொல்.
இவன் சரிதம் என்ன? காந்தாரி பெற்ற கௌரவர்களில் ஒருவன்தானா இவனும்?’’ என்றான். கண்ணனோ இவன் கௌரவர்களில் ஒருவன், அதாவது, திருதராஷ்டிரரின் மகன். ஆனால், காந்தாரியின் பிள்ளை அல்ல!’’ என்றான். குந்தி நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளுக்குக் காந்தாரி இவனை ஏன் வெறுத்தாள் என்பது புரியத் தொடங்கியது.
கண்ணன் மேலும் விளக்கலானான்: ‘‘காந்தாரி கர்ப்பவதியாய் இருந்தபோது அவள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதனால், கண்ணில்லாத திருதராஷ்டிரருக்குப் பணிவிடை செய்ய அமர்த்தப்பட்டாள் சுகதா என்ற ஒரு பெண். அவளது பணிவிடையில் மகிழ்ந்த திருதராஷ்டிரரின் வற்புறுத்தலால் சற்று எல்லை மீறியதன் விளைவுதான் யுயுத்சு.
யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.
தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான். அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான். அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை! இந்தச் செய்திகளைக் கேட்டு குந்தி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் என்று திடீரென்று வெளிப்பட்ட இந்த உண்மை எனக்கு வியப்பாக இருக்கிறது!’’ என்றாள் அவள்.
அவளை பாண்டவர்கள் அனைவரும் ஆமோதித்தனர். யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள். கண்ணனின் தயவால் தர்மம் வென்றது. பின்னொருநாள் திருருதராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கான அந்திம கடனை கண்ணன் விருப்பப்படியே செய்தான்.
நாமும் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயோமாய் தொழுது நம் துயரம் தீர்ப்போமாக!