திருச்சி உத்தமர் கோயில் – புராணக் கதைகள்!
திருச்சி மாவட்டத்தில் உள்ளது உத்தமர்கோவில். இக்கோவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் அருள்பாளிக்கும் 108 திவ்ய தேசங்களில், 3ஆவது திவ்ய தேச தலமாகும்.
மும்மூர்த்திகள் அருள்புரியும் ஸ்தலம்:
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற தலமாக இங்கு, பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்களின் தேவியர்களுடன் தம்பதி சமேதராக அருள் புரிகின்றனர். இந்த உத்தமர் கோவிலானது கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3ஆவது திவ்ய
புராணக் கதை:
சிவனைப் போலவே பிரம்மாவும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி சிவன், பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார்.
இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. அவர் பசியால் வாடினார்.
இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார்.
பூரணவல்லி தாயார்:
ஒருநாள் இத்தலத்துக்கு ஈசன் வந்த போது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் இத்தலத்தில் இருக்கும் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்று விளங்குகிறார். திருமால் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.
ப்ரம்மா சன்னதி உருவான கதை:
பிரம்மனுக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோவில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மனும் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மனின் பக்தியை சோதிக்க எண்ணிய திருமால், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மன் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மனின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சியளித்து எப்போதும்போல் இந்த தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார்.
அத்துடன், பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும், இந்த தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு இங்கே தனி சந்நிதி எழுப்பப்பட்டது. பிரம்மதேவருக்கு இடது புறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது.
ஆலயத்தின் சிறப்பு:
இந்த கோவிலில் பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி சிவன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார். சிவன், பிட்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்’ என்றும், திருமால் கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்’ என்றும் ‘கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
உத்தமர் கோயில் பெயர் காரணம்:
கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஈசன், பிரம்மதேவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சந்நிதிகள் அவர்கள் துணையுடன் அருள்பாலிக்கின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். இத்தலம் சப்தகுரு தலம் என்று அழைக்கப்படுகிறது. சிவகுரு தட்சிணாமூர்த்தி, திருமாலின் குரு வரதராஜர். குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிராச்சாரியர் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடத்தில் இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபெயர்ச்சியின்போது அனைவருக்கும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறும்.
பலன்கள்:
இங்கிருக்கும் பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்கின்றனர் பக்தர்கள். மேலும், குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக, தம்பதியர் ஒற்றுமை சிறக்க இத்தல பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும் என்கின்றனர் பக்தர்கள்.