திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் – புராணக் கதைகள்!

284

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் – புராணக் கதைகள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு சுப்பிரமணிய சுவாமி மூலவராக காட்சி தருகிறார். உற்சவர் சண்முகரும், தாயார் வள்ளி, தெய்வானையும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தல விருட்சமாக மகுட மரம் இருக்கிறது. சிறுதணி என்பது இந்த ஊரின் புராண பெயர் ஆகும்.

இந்திர தீர்த்தம் தவிர சரவணப் பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மட செட்டிகுளம், நல்லாகுளம் ஆகியவை இந்த கோயிலின் தீர்த்தங்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா, வள்ளி திருக்கல்யாண விழா, சித்திரை பெருந்திருவிழா, ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை திருவிழா, தமிழ் புத்தாண்டு, ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

அஸ்வினி, கார்த்திகை, பரணி ஆகிய நட்சத்திர நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, ஆற்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தல சிறப்பு:

வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் திருத்தணி கோயிலில் 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவரான சண்முகரின் சந்நிதியாக உள்ளது. முருகப் பெருமானின் 6 படை வீடுகளில் இது 5ஆவது படை வீடாகும். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்துவிட்டு அருணகிரியார் இங்கு வந்து அமர்ந்த நிலையில், தனது கோபத்தை தணித்துள்ளார். அசுரனோடு மோதியதால், இத்தலத்து மூலவரின் மார்பில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தெய்வேந்திரன், யானையை, தெய்வானைக்கு கல்யாண சீதனமாக கொடுத்த தலம் இது.

இங்கு மூலவருக்கு எதிரில் மயிலுக்குப் பதிலாக யானை இருக்கிறது. அதுவும், சன்னதியின் வெளியே பார்த்தவாறு அமைந்துள்ளது. முருகப் பெருமான், வலது கையில், சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ர வேலுடன் (இடியைப் போன்று ஓசை எழுப்பும் சூலம் போன்ற கருவி), இடது கையை தொடையில் வைத்து ஞானசக்திதராக காட்சி தருகிறார். இங்குள்ள முருகப் பெருமானிடம் மற்ற கோயில்களைப் போன்று வேல் கிடையாது. அதோடு, முருகப் பெருமான் தனது கோபம் தணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலம் என்பதால், இந்தக் கோயிலில் சூரசம்ஹாரமும் கிடையாது.

முருகப் பெருமானை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட கல்ஹார தீர்த்தம் மலையில் இருக்கிறது. வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். இந்தக் கோயிலானது 365 படிக்கட்டுகளுடன் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள ஆபத்சகாய விநாயகரை கடைசியில் தான் வணங்க வேண்டுமாம். கோயிலில் வேறெங்கும் காண முடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோறாடல் என்ற சிறப்பு பெயர் உண்டு.

திருமண வரம், குழந்தை பாக்கியம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் வேண்டியும் பக்தர்கள் பிராத்தனை செய்கின்றனர். மேலும், எத்தனை கோபம், மனக்குழங்கள் இருந்தாலும் முருகப் பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் அத்தனை கோபங்களும், மனக்குழப்பங்களும் நீங்கிவிடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்குவதல், பொங்கல் படைத்தல், சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், இத்தலத்தில் கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர்.

வேல் இல்லாத வேலன் முருகன்:

முருகப் பெருமான், வலது கையில், சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ர வேலுடன் (இடியைப் போன்று ஓசை எழுப்பும் சூலம் போன்ற கருவி), இடது கையை தொடையில் வைத்து ஞானசக்திதராக காட்சி தருகிறார். இங்குள்ள முருகப் பெருமானிடம் மற்ற கோயில்களைப் போன்று வேல் கிடையாது. அதற்குப் பதிலாக அலங்காரம் செய்யும் போது மட்டுமே தனியாக வேலும், சேவல் கொடியும் வைக்கின்றனர். முருகப் பெருமான் மணமுடித்த வள்ளி மற்றும் தெய்வானை இருவருக்கும் இந்தக் கோயிலில் தனித்தனி சன்னதி உள்ளது. முருகப் பெருமானுக்குரிய குமார தந்திர முறைப்படி இங்கு பூஜை செய்யப்படுகிறது.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக முருகன் கோயில்களில் கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆனால், இந்தக் கோயிலில் முருகப் பெருமான் தனது கோபம் தணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பதால், இங்கு சூரசம்ஹாரமும் கிடையாது. மாறாக, முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.

இங்கு மூலவருக்கு எதிரில் மயிலுக்குப் பதிலாக யானை இருக்கிறது. அதுவும், சன்னதியின் வெளியே பார்த்தவாறு அமைந்துள்ளது. இதற்கு ஒரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகப் பெருமானுக்கு மணமுடித்து தந்த போது தேவலோகத்து வெள்ளை யானையான ஐராவதத்தை திருமண சீதனமாக கொடுத்தார். அப்படி கொடுக்கவே தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்து போனது. ஆகையால், ஐராவதத்தின் பார்வையை தேவலோகத்தை பார்த்தவாறு இருக்க அனுமதிக்கும்படி இந்திரன் வேண்டினா. இதற்கு முருகப் பெருமானும் சம்மந்தம் தெரிவிக்கவே யானையின் பார்வை தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இதற்கு கர்ண பரம்பரை கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது, முருகன், குறத்தியான வள்ளியை மணமுடிக்க சென்ற போது, வள்ளி விநாயகராகிய யானையைக் கண்டு பயந்து ஓடினாள். தன்னைக் கண்டு வள்ளி மீண்டும் பயந்து ஓடி விடக்கூடாது என்பதற்காக யானை வடிவில் விநாயகரை வெளியில் பார்த்தவாறு இருப்பதாக சொல்கிறார்கள்.

அமுதவல்லி மற்றும் சுந்தரவல்லி ஆகிய இருவருமே திருமாலின் மகள்கள். இருவருமே முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்ள தவமிருந்தனர். தவத்தின் பயனாக அமுதவல்லி தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளி என்ற பெயரில் நம்பிராஜனிடம் வளர்ந்து முருகப் பெருமானை மணந்தனர். சகோதரிகளான இருவருமே வேறில்லை என்பதன் அடிப்படையில் வள்ளி மற்றும் தெய்வானை இருவரும் ஒரே அம்பிகையாக கஜவல்லி என்ற பெயரில் அருள்பாலிக்கின்றனர். கஜவல்லியின் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடது கையில் தெய்வானைக்குரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தே புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில் இவள், கிளி வாகனத்தில் எழுந்தருகிறாள்.

முருகப்பெருமானுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாற்றுவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாக கொடுத்ததாக சொல்லப்படும் சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாற்றப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் தங்களது நெற்றியில் இட்டு கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். அப்படி சந்தன நீரை குடிப்பதால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இங்கு சந்தன பிரசாதம் கிடைக்கிறது. மற்ற, நாட்களில் சந்தன பிரசாதம் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

முருகப் பெருமானை, இந்திரன் ஆடி கிருத்திகை நாளன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். இதனால், இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவானது 3 நாட்கள் நடைபெறுகிறது இந்த நாளின் போது முருகப் பெருமான் அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்ற மலரை முருகப் பெருமானுக்கு சூட்டி வழிபட்ட கோயில் என்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.

கோயிலில் மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி சுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் முருகப் பெருமானே வள்ளி திருமணத்திற்கு முன்னதாக இங்கு எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் மாதம் குளிர்காலம் என்பதால் அந்த மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளின் போது இவருக்கு வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.

வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு அன்று மக்கள் ஆங்கிலேயர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், இந்தப் பழக்கத்திலிருந்து மக்களை ஆன்மீக ரீதியில் திசை திருப்ப முருகப் பக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917 ஆம் ஆண்டு புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் பழக்கத்தைக் கொண்டு வந்தார்.

புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்து திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்புதான், நள்ளிரவில் 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. இதுவே தமிழ் புத்தாண்டு அன்று 1008 பால்குட அபிஷேகம் நடக்கிறது.

கோயில்களில் பைரவர் வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். ஒரு சில கோயில்களில் இரு நாய்களுடன் பைரவர் காட்சி தருவதைக் காணலாம். ஆனால், இந்தக் கோயிலில் 4 நாய்களுடன் பைரவரைக் காணலாம். வழக்கம் போல் ஒரு நாய் பைரவருக்கு பின்புறம் உள்ளது. மற்ற 3 நாய்களும் பீடத்தை சுற்றியிருக்கிறது. அவை 4 வேதங்களாக கருதப்படுகின்றன. கல்வியில் சிறந்து விளங்கவும், கல்வியில் புலமை பெறவும் நான்கு நாய்களுடன் அருள்புரியும் பைரவரை வழிபாடு செய்கின்றனர்.

சித்திரை பிரம்மோற்சவத்தின் போது தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. பள்ளியறை பூஜையின் போது ஒரு நாள் தெய்வானையும், ஒரு நாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்புரிகின்றனர். வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்சவத்தின் 6ஆவது நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

இத்தல முருகனின் அருளை முஸ்லீம் ஒருவர் பெற்றார். ஆகையால், தற்போதும், விழாக்களில் முருகன் புறப்பாடாகும் போது முருகன் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்துவிட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதால், இத்தலத்து மூலவரின் மார்பில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தெய்வேந்திரன், யானையை, தெய்வானைக்கு கல்யாண சீதனமாக கொடுத்த தலம் இது.

இறைவனைத் தேடி நாமாக சென்று விட வேண்டும். இல்லையென்றால், நாம் அவனிடம் செல்ல மறுத்து, அவனால், தரப்பட்ட இந்த வாடகை வீடாகிய உலகத்தில் தொடர்ந்து வசிக்க விரும்பினால், அவன் விடமாட்டான். ஞானிகளும், யோகிகளும் எப்படியோ அவனை அடைவதற்குரிய வழியைச் செய்து எப்படியோ அவன் திருப்பாதத்தை அடைந்து விடுகின்றனர். பாமரர்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப் போவதாக நினைத்து பொன்னையும், பொருளையும் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன், திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக் கொடியின் கீழிலிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தினைப்புனைத்தைக் காவல் காக்கும் பணியை வள்ளி செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உலகப்பற்று எனப்படும் ஆசையையும் குறிக்கும்.

இது உனக்கு சொந்தமானதல்ல, எனக்கு சொந்தமானது என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்வாகிய இறைவனைக் குறிக்கும். இதனை யாரும் புரிந்து கொள்ளாமல், அவற்றை கற்கலால் விரட்டியடிப்பது என்பது தெய்வத்தை புரிந்து கொள்ளாத தன்மையை குறிக்கும். இந்த உலகமே நிரந்தரம் என்று கருதியிருக்கும், இது போன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியதெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே விரும்புவான்.

அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப் பெருமான் முதியவர் வேடமிட்டு வந்தார். ஆனால், வள்ளியோ அவர் யார் என்பது அறியாமல் பயந்து ஓடினாள். இறைவனோ அவளை ஆட்கொள்ள யானை மூலமாக பயமுறுத்தினார். அவர் அவளைத் தழுவினார். இறைவனது ஸ்பரிசம் படவே வள்ளிக்கு ஞானோதயம் பிறந்தது. இதையடுத்து, அவருடனேயே ஐக்கியமாகிவிட்டாள். பாமரர்கள் அவள் இறைவனுடன் ஐயக்கிமாகி இருப்பதை திருமணமாக கருதி வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது. முருகப் பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால், தணிகை மலை என்று பெயர் பெற்ற இத்தலமானது நாளடைவில் திருத்தணி என்றானது.