எளிமையான துளசி அஷ்டோத்திரம்!

199

எளிமையான துளசி அஷ்டோத்திரம்!

ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா

வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே

தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்

பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வன மாலை என்னும் மருவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே

அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து

மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு

செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து

புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு

என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க

மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள்

மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்

தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்

அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்

தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்

புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்

கன்னியர்கள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்

க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்

பக்தர்கள் பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்

கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து

கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி

கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்

நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே

அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்

இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்

அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால்

தாயே ஜகன் மாதா அடியாள் செய்கின்ற பூஜையை

ஏற்று கொண்டு அடியார் செய்த சகல பாவங்களையும்

மன்னித்து காத்து ரக்ஷித்து கோறும் வரங்களை கொடுத்து

அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே.

செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் துளசி அம்மனுக்கு பூஜை செய்து வரும்போது இந்த ஸ்தோத்திரத்தை ஒரு முறை உச்சரித்து வந்தால் அந்த துளசி அம்மனின் அருளைப் பெற்று, துயரங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வினை பெறலாம்.