Saturday, October 14, 2023
HomeAalayangalஆதி ஜெகநாதர் பெருமாள் கோயில்!

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோயில்!

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோயில்!

ராமநாதபுரம் திருப்புல்லாணி என்ற ஊரில் உள்ள கோயில் ஆதி ஜெகநாதர் (ஜெகந்நாதர்) பெருமாள் கோயில், இங்கு, ஆதி ஜெகநாதர், கல்யாண ஜெகநாதர் மூலவராக காட்சி தருகின்றனர். உற்சவராகவும் கல்யாண ஜெகநாதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96-வது கோயிலாகும். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம்.

இந்தக் கோயிலில் பிரம்மோற்சவத் திருவிழா, பங்குனி மாத ராமர் ஜெயந்தி விழா, சித்திரை மாத விழா, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆதி ஜெகநாதருக்கு பங்குனி மாதத்திலும், ராமருக்கு சித்திரை மாதத்திலும் பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

இந்த கோயில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.
விஷ்ணுவின் அவ தாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

கடற் கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர் களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

ஆகவே, இந்த தலம் சராணாகதி தருமத்தை அனுஷ்டிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்த லத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வருகின்றனர்.

இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்துதலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

கோவில் தல விருட்சமாக உள்ள அரச மரம் சாமி சன்னதியின் மேற்கில், வெளிப் பிரகாரத்தில் நாய்ச்சியார் சன்னதிக்கு பின் பக்கம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை பெற்ற தலமாக திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் சாமி கோவில் விளங்கி வருகிறது.

பழங்கால சிற்பக்கலையின் நுணுக்கங்களை கோவிலுக்குள் எங்கும் காண முடிகிறது. பெருமாள் சன்னதிக்கும் தாயார் சன்னதிக்கும் எதிரில் வெளிப்பக்கம் பக்தி உலாவு மண்டபத்தில் காணப்படும் சேதுபதிகளின் வண்ண வடிவங்கள், தானீகர்களின் பதுமைகளும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. தர்ப்பசயன ராமன் திருமேனி அமைப்பும், அவருடைய நாபீ கமலத் தண்டின் அமைப்பும் பார்க்க பார்க்க பக்தர்களின் மனதை பரவசப்படுத்தும்.

பங்குனி மாதத்தில் ஆதி ஜெகநாத பெருமாள் சாமி பிரம்மோத்சவம், சித்திரையில் பட்டாபிராமன் பிரம்மோத்சவம், ஆடியில் சூடிக்கொடுத்த நாச்சியார் உற்சவம், ஆவணியில் திருப்பு வித்திரோத்சவம், மார்கழியில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள், புரட்டாசியில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமி ஆகிய உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

தினமும் நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் 2002, 2012-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது.

மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்வது என்பது மரபு. நம்பிக்கையுடன் வழிபட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நமது பிரச்சினைகள் நீங்கி நலமோடும், வளமோடும் வாழ பெருமாளை வணங்கி வழிபடுவோம்.

நடை திறக்கும் நேரம்

தினமும் காலை 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 12.15 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை திறந்தே இருக்கும்.

நேர்த்திக்கடன்

புரட்டாசி சனிக்கிழமை களில் ஆதி ஜெகநாத பெருமாளை தரிசிக்க கூட்டம் அலைமோதும். பக்தர்கள் சுவாமிக்கு துளசி மாலை சாத்தியும் தாயாருக்கு பட்டு சாத்தியும் வழிபடுவார்கள். தாங்கள் வேண்டியதை நிறை வேற்ற மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள். பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தும் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

கோயிலில் நடைபெறும் விழாக்கள்

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலில் ஆதி ஜெகநாதருக்கு பங்குனி மாதத்திலும், ராமருக்கு சித்திரை மாதத்திலும் பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாக்களின்போது ஜெகநாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். ஜெகநாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ரா பவுர்ணமியன்று ராமரும் தேரில் எழுந்தருளுவது கண் கொள்ளாக் காட்சியாகும். வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

கடலரசனுக்கு மன்னிப்பு வழங்கிய இடம்

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வெளியில் விளங்கும் 22 தீர்த்தங்களுள் இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தமும் அடங்கும். ஆதி சேது என்னும் இடம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ராமேஸ்வரத்தில், தீர்த்தங்கள் வகையில் கூறப்படும் தேவிபட்டணம் என்பது இத்தலத்தின் அருகில் உள்ளது. இங்குக் கடலில் நவக்கிரகம் உள்ளது. மக்கள் அதனை வழிபட்டுப் புத்திரப் பேறு அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

விபீஷணன் இங்குதான் சரண் அடைந்தான். இலங்கை வேந்தனாக முடி சூட்டப்பட்டதும் இங்குதான். கடலரசனுக்கு பகவான் மன்னிப்பு வழங்கிய இடம்.
புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை நீங்கும்.

திருமணமாகி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷம் பெற இயலாதவர்கள் ஆண்- வாரிசு இல்லாதவர்கள், பிரம்மஹத்தி தோஷம் உடையவர்கள் அனைவரும் இத்தலத்திற்கு வந்து நாக பிரதிஷ்டை செய்து கோயில் பால் பாயாசத்தை உண்டு, சர்ப்பசாந்தி ஹோமம் செய்தால் முன் வினைப்பாவம் விலகும். கிரக தோஷம் நீங்கவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 7 =

Most Popular