Saturday, October 14, 2023
HomeAalayangalவாழ்வுக்கு வழிகாட்டும் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில்

வாழ்வுக்கு வழிகாட்டும் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பதுபோல, வேல் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டில் முன்னோடியாக இருந்திருக்கிறது. தொடக்க காலங்களில் அனைத்து பகுதிகளிலும் வேல்தான் வழிபாட்டிற்குரியதாக இருந்தது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஏனெனில் தமிழன், அந்த வேலை ஞானத்தின் பிறப்பிடமாக கருதினான். வேலினை ஆதித் தமிழன் வடிவமைத்ததே ஞானத்தின் உருவமாகத்தான் என்பதை, அந்த வேலை நாம் கூர்ந்து கவனித்தாலே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு மனிதனுடைய அறிவு என்பது வேலின் அடிப்பகுதியைப் போல ஆழ்ந்து இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்திருக்கும் அறிவானது, மேற்பகுதியைப் போல நன்றாக அகன்றும் இருக்க வேண்டும். அதோடு அந்த அறிவானது, வேலின் முனைப்பகுதி போல கூர்மையாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைந்த காரணத்தால்தான், வேலை ஞானத்தின் பிறப்பிடமாக முன்னோர்கள் அமைத்தார்கள்.

அந்த வேல்தான், பல ஆலயங்களிலும் முன் காலத்தில் முதன்மை வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலம், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலம் என பல இடங்களிலும் வேல்தான் பிரதான வழிபாட்டுக்குரியதாக இருந்துள்ளது. காலப்போக்கில்தான் இங்கெல்லாம், முருகனின் திருவுருவங்கள் உருவாக்கப்பட்டும், பிரதிஷ்டை செய்யப்பட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

ஆலயக் கருவறையில் முருகப்பெருமானின் சிலை வடிவுக்கு பதிலாக, வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான், கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் ஆகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்து உள்ளது. கோவில்பட்டியில் இருந்து பிழைப்புக்காக இலங்கைக்கு வணிகம் செய்யச்சென்ற சுப்ரமணியன் எனும் முருக அடியவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் மேல் மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. அந்த முருகன் அடியவர் இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் பொழுது, கதிர்காமம் முருகனைப் பிரிய மனம் இல்லாமல் கவலை கொண்டார். தன் அடியவரின் வாட்டம் போக்க எண்ணிய கதிர்காமம் முருகன், அந்த அடியவரிடம் இருந்த வேலுக்குள் தம்மை செலுத்தினார்.

பின்னர் அசரீரியாய், “அன்பனே.. உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊரான கோவில்பட்டிக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று அங்கு உள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் வாட்டம் மற்றும் அடியவர்களின் வாட்டத்தையும் யாம் களைவோம்” என்று கதிர்காமம் முருகன் அருளி மறைந்தார். கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேல் உடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான், இங்கு மூலவராக உள்ளது.

இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டியில் இத்தலம் வந்து சத்ரு சம்கார வேல் பதிகம், வேல்மாறல் ஆறு முறை பாராயணம் செய்து மூலவர் கதிர்வேலை வழிபட்டால் பகை, பில்லி, சூன்யம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும். சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து, கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிகப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவரை வழிபட வேண்டும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் இப்படிச் செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். சகல அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

இத்தலத்தில் வழிபடுவது, இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது. கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கோவிலில் உள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, குழந்தை வரம் பெறுகிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு யாரும் செல்வதில்லை. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். சில நேரங்களில் நள்ளிரவு பொழுதுகளில் பஜனை சத்தம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. திருக்கார்த்திகை நன்னாளில் இந்த சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்’ ஏற்றுகிறார்கள். இங்கு சூரசம்காரம் கந்த சஷ்டியில் வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.

விருதுநகர் அருகில் உள்ள கோவில்பட்டியில் சொர்ணமலை அமைந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் இருக்கிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனாய பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த திருக்கோவில் இதுவாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

Most Popular