Monday, October 23, 2023
HomeAalayangalபுகழ் பெற்ற வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில்

புகழ் பெற்ற வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில்

 

சென்னை வில்லிவாக்கத்தில் புகழ் பெற்ற சக்தி தலமான பாலியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில்சென்னை வில்லிவாக்கத்தில் புகழ் பெற்ற சக்தி தலமான பாலியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாலியம்மன் தானே விரும்பி எழுந்தருளியதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் பின்னணியில் மிக சிறப்பான புராண வரலாறு உள்ளது. அந்த வரலாற்றை முதலில் படித்தால் பாலியம்மன் மீது உங்களுக்கும் தானாகவே பக்தி உணர்வு வந்து விடும். அந்த புராண வரலாறு வருமாறு:-

ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இந்த ரேணுகாதேவிதான் பெரியபாளையத்தில் வீற்றிருக்கிறாள். ஒருதடவை ரேணுகாதேவி உலக மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பூமிக்கு வந்தாள். அப்போது அவள் தற்போது உள்ள வில்லிவாக்கம் பகுதியில் அமைந்திருந்த பாலிநதி கரையோரத்துக்கு வந்தாள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தோன்றி சென்னை வழியாக ஓடும் கூவம் நதியானது ஒரு இடத்தில் இரண்டாக பிரிந்து திருபாச்சூர், திருவேற்காடு, திருமுல்லைவாயல், கொன்னூர் வழியாக வடசென்னை சென்று எண்ணூரில் கடலில் கலக்கிறது. புராண காலத்தில் இந்த நதி பாலி நதி என்று அழைக்கப்பட்டது. இந்த நதிக்கரையின் ஓரத்தில்தான் ரேணுகாதேவி வந்து இருந்தாள்.

பாலிநதியின் அழகில் மனதை பறிகொடுத்த ரேணுகாதேவி அங்கேயே சிறிய பெண் உருவத்தில் சுற்றி சுற்றி வந்தாள். அதை அந்த பகுதியில் வாழ்ந்த வேடர்கள் கண்டனர். அவளிடம், “சிறுமியே நீ யார்? உன் பெற்றோர் எங்கே? நீ ஏன் தனியாக இந்த பகுதியில் சுற்றிக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டனர்.
அதற்கு ரேணுகாதேவி, “நான் இந்த பகுதியில் குடியேற ஆசைப்படுகிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த பாலிநதியில் நீராடி நீங்கள் என்ன கேட்டாலும் நான் அருள் புரிவேன்” என்று கூறினாள்.

அதன் பிறகே வில்லிவாக்கம் வேடர்களுக்கு சிறு பெண்ணாக வந்திருப்பது சக்தியின் அம்சம் கொண்டவள் என்பதை உணர்ந்தனர். சிறு பெண்ணாக இருந்ததால் ரேணுகாதேவியை அவர்கள் பாலா என்று பெயரிட்டு அழைத்தனர். அம்மனின் உத்தரவுபடி கேட்டை நட்சத்திரத்தன்று அம்மனின் தலையை களி மண்ணில் செய்து வழிபட தொடங்கினார்கள்.

அந்த அம்மன் பாலா அம்மன் என்று அழைக்கப்பட்டாள். நாளடைவில் பாலா அம்மன் என்பது பாலியம்மன் என்று மாறியது. பாலி நதியில் மனதை பறிகொடுத்து தானாக விரும்பி குடியேறியதாலும் அந்த அம்மனுக்கு பாலியம்மன் என்று பெயர் ஏற்பட்டதாக பக்தர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறும் முன்பு இந்த ஆலயம் வில்லிவாக்கம் பகுதி மக்களின் கிராம தேவதையாக இருந்தது. தொண்டை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள் இந்த அம்மனை தேடி அலை அலையாக வந்து வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடியாக சிலர் இந்த பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் தங்களுடன் ஒரு பெரிய அம்மன் சிலையையும் வண்டியில் கொண்டு வந்து இருந்தனர். பாலியம்மன் கோவில் அருகே வந்தபோது அந்த மாட்டு வண்டியின் அச்சு முறிந்தது. இதனால் மாட்டு வண்டி சாய்ந்தது. மாட்டு வண்டியில் இருந்த அம்மன் சிலை கீழே விழுந்தது. அந்த அம்மன் சிலையை மீண்டும் வண்டியில் ஏற்ற முயன்றனர். ஆனால் சிலையை அவர்களால் தூக்க முடியவில்லை.

இதையடுத்து உள்ளூர் பகுதி மக்களும் அந்த சிலையை தூக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த அம்மன் சிலையை ஒரு அடி கூட நகர்த்த இயலவில்லை. அதன் பிறகே அந்த அம்மன் இந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறாள் என்பதை மக்கள் உணர்ந்தனர். எனவே அந்த பகுதியில் அம்மனுக்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.

அதற்கு அம்மன் உத்தரவு கிடைத்தது. இதையடுத்து அம்மன் சிலையை எங்கு பிரதிஷ்டை செய்வது என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அந்த ஊரில் பாலியம்மன் சிரசை மட்டும் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த சிரசுக்கு பின்னால் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து விடலாம் என்று கிராம மக்கள் ஏகமனதாக முடிவு செய்தனர். அதன்படி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அன்று முதல் அந்த அம்மனும் பாலியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். சில பக்தர்கள் பாலாம்மாள் என்றும் அழைத்து வழிபடுவது உண்டு.
பாலியம்மன் வீற்றிருக்கும் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்துக்குள் மிகப்பெரிய அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது. இந்த இரு மரங்களும் இணைந்து உள்ளன. சுமார் 300 ஆண்டுகளாக இந்த மரங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். இந்த மரம் பகுதியில் விநாயகர் சன்னதி அமைந்து இருக்கிறது.

பாலியம்மன் ஆலயம் மிக சிறிய ஆலயம்தான். ஆனால் பாலியம்மன் மகிமை பக்கம் பக்கமாக எழுதினாலும் நீண்டு கொண்டே செல்லும். அந்த அளவுக்கு பாலியம்மன் தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனையும் கவர்ந்து அருள் பாலித்து வருகிறாள். இந்த ஆலயம் மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டது. இந்த மண்டபங்களை கடந்து சென்றால் கருவறையில் பாலியம்மன் வீற்றிருக்கிறாள். அவள் தனது கைகளில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் மகாலட்சுமி, மகேஸ்வரி, சரஸ்வதி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஆலயத்தின் வலது பக்கத்தில் அய்யப்பனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் நவக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாலியம்மனுக்கு பொதுவாக பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதை வில்லிவாக்கம் பகுதி மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குடும்பத்தின் நிம்மதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது. குடும்பத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் சரியாகி விடும் என்று சொல்கிறார்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாக தோஷம் நீங்க பாலாபிஷேகத்தை ஒரு பரிகார வழிபாடாக கருதுகிறார்கள். இது மட்டுமின்றி திருமண தடை நீக்கத்துக்கும் பாலாபிஷேகம் வழிபாடு கை கொடுப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பாலியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் அனைத்து மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியின்போது பாலியம்மன் சிங்க தேரில் அமர்ந்து பவனி வருவாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவார்கள். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீப உற்சவம், தை பொங்கல், மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜை உண்டு. சக்தி தலங்களில் பாலியம்மன் ஆலயத்தில்தான் அதிகாலை பூஜை மிக விமர்சையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்ற மாதங்களில் வரும் பண்டிகைகளை விட ஆடி மாதம் முழுவதும் தினமும் இந்த ஆலயம் திருவிழா கோலமாக மாறி விடுகிறது. ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்த தலத்தை நாடி வருகிறார்கள்.

பாலியம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்கள் ஆடி மாதத்தில் தவறாமல் வில்லிவாக்கம் வந்து பாலியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதற்கு தவறுவது இல்லை. ஆடி மாத கடைசி வாரம் இந்த ஆலயத்தில் தீ மிதி விழா நடைபெறும். இதில் வட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இந்த தீ மிதி திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். தீ மிதி விழா முடிந்ததும் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும். இது பாலியம்மன் நிகழ்த்தும் அதிசயமாக கருதப்படுகிறது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + four =

Most Popular