பக்தனின் கடனை அடைத்த அம்பிகை!
அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி, குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர முடியவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம்.
கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க, அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும்? கூச்சல் போடாதீர்கள். அரை நொடியில் பணத்துடன் வருகிறேன்”
மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள்.
சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள், ஒரு சிறு பை சகிதம், பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே ”இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான, வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு, பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள்.
புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..
செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..
சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர், அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட, ”அடடே உங்களை கவனிக்க வில்லை. பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர்.
‘முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம், புருவம் முடிச்சிட, நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே, ‘பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். ”உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்து விட்டு, பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார்”. ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர், பின் மனைவியை அழைத்து, ”நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா” என்று கேட்க அந்த அம்மையாரோ திகைப்புடன்,
”அய்யோ நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்? இது எப்படி சாத்தியம்?” என்று அரற்றிய அக்கணம்.
பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி. ”நான் தான் பணம் கொடுத்தேன்”. குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய, அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை! இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு;
கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. ”உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசிவிட்டேன்.
மன்னியுங்கள்!” கண்கள் பனிக்க, செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர் தான். தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே, காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில், பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
