இந்த நாளில் பித்ருக்களுக்கு, எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். `திலம்’ என்றால் `விஷ்ணோர் அம்ச சமுத்பவ:’ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள்.
எனவே, `திலதானாது அசக்யம் மே பாபம் நாசய கேசவ’ என்று கூறுவார்கள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே, சகல பாவங்களும் நீங்கிவிடுமாம். இந்த எள்ளும், தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய தினம் பித்ருக்களை – மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்று கூறுவார்கள். இதற்குக் குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை. இருப்பினும் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்.
சந்திரன் விராட புருஷனாகிய பெருமாளின் மனதிலிருந்து தோன்றியவர் என்று வேதம் கூறுகிறது. சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடி வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். ஏனென்றால், நாளை முதல் நாம் உலகத்தைப் பார்க்கலாம் என்ற ஆசையும் ஆர்வமும்தான் சந்திரனின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள், நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும், என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாகச் சொல்லப்பட்டிருக்கிறது போலும்.
பித்ரு பூஜை செய்ய, தர்ப்பணம் கொடுக்க வசதி இல்லை என்று நினைக்கக்கூடாது. உள்களால் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள் போதும். பித்ருக்களை வழிபட மந்திரம் தெரிந்திருக்க வேண்டும், ஐதீகம் புரிய வேண்டுமே என்று சிலர் தவிப்பார்கள், தயங்குவார்கள். அத்தகைய தவிப்போ, தயக்கமோ தேவை இல்லை.
தாயே தந்தையே நான் கொடுக்கும் இந்த தண்ணீரையும், எள்ளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட போதும். உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் மனம் குளிர்ந்து போவார்கள். எனவே பித்ரு பூஜைகள், தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாமல் இருந்து விடாதீர்கள்.
பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான்.
அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம்.
