Thursday, November 2, 2023
HomeAanmeega Thagavalgalஅன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.....

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது…..

(1) மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்….

(2) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

(3) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

(4) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

(5) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

(6) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

(7) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

(8) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

(9) மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

(10) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

(11) ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

(12) அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

(13) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது – இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் – அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.

(14) நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் – கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + twenty =

Most Popular