தொழில் வளர்ச்சிக்கு வழிபட வேண்டிய கோயில்!
கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி என்ற ஊரில் உள்ள கோயில் அத்தனூர் அம்மன் கோயில். இங்கு அத்தனூர் அம்மன் மூலராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். இந்தக் கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஆடி வெள்ளிக்கிமைகளில் விசேஷ பூஜைகளும் நடைபெறும். வருடந்தோறும் ஊஞ்சல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு திருக்கல்யாண உற்சவமும் உண்டு.
இந்தக் கோயிலில் அனைத்து தெய்வங்களின் சன்னதிகள் இருப்பதால், விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம், பிரதோஷம், தட்சிணாமூர்த்திக்கு குரு பூஜை, நாக வழிபாடு, கோமாதா பூஜை, பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கணபதி என்ற ஊரானது கோயம்புத்தூரிலிருந்து வடக்கில் சத்திமங்கலம் செல்லும் பாதையில் 3 கல் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியின் கிழக்கில் அம்மன் சந்நிதி வடக்கு நோக்கியுள்ளது.
ஆலயத்தில் மூலஸ்தானத்தில் அருள்மிகு அத்தனூர் அம்மனும் உள்மண்டபத்தில் நின்று கொண்டிருக்கும் நிருத்த கணபதி மூர்த்தியும், வெளிப்புறத்தில் ஒரு விநாயக மூர்த்தியும் உள்ளது. அம்மனுக்கு முன் சிங்க வாகனம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சுமி அம்மன், கோமாதா, நாகசக்தி ஆகிய உப தெய்வங்களும் உண்டு. குழந்தைபேறு, திருமணமடை, தொழில் வளர்ச்சி மற்றும் எல்லா விதமான பிரச்சனைகளும் தீர இந்தக் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. பேய்க் காய்ச்சல், வாந்தி பேதி முதலிய நோய்கள் தீர பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பூசாரி வேடன், நாள்தோறும் திருத்தளிக்குள் வைத்துப்போன ஒரு கூடை பருத்திப் பஞ்சினை இரவு விடியும் முன் அம்மன் நூலாக நூற்று வைத்திருப்பதை, அன்னவன் விடிந்த பின் பூசையிடுவதற்கு வந்தபோது பார்த்து எடுத்துக்கொள்வது வழக்கம். பேய்க் காய்ச்சல், வாந்திபேதி முதலிய நோய்களை அம்மன் திருவருளால் நீக்கி வந்திருக்கின்றனர். அம்மன் அன்றுதொட்டு இன்றுவரை ஆடு, கோழி முதலிய பிணப்பலி ஏற்றுக் கொள்ளாமையும்,சுத்த பூசனை ஏற்றுக் கொண்டு அருள் வழங்கியும், அன்பு இரக்கம் முதலிய நல்லியல்புகளைப் பூண்ட உத்தமர்க்கு மாறிலா இன்பம் கொடுப்பவளாகவும், பிணப்பலி ஏற்காத இவ்வருஞ் செயல் அம்மன் சந்நிதியில் நிலவுவாதக நம்பப்படுகிறது.
கணபதியில் அமைந்துள்ள பழமையான திருக்கோயில் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற அத்தனூர் அம்மை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மல்லூருக்குப் பக்கத்தில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் சிலர் கணபதிக்குக் குடிபெயர்ந்து வந்தபோது இங்கு எழுந்தருளச் செய்யப்பட்டாள் என்று சொல்லப்படுகிறது. பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர், பால வேளாளக் கவுண்டர்களால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த காங்கயம் என வழங்கும் காங்கேய நாட்டிலுள்ள அத்தனூரினின்றும் கணபதி என்னும் இத்தலத்தினுக்குக் கொண்டுவந்து கோயிலில் பிரதிட்டை செய்யப்பெற்றது.
அத்தனூரிலிருந்து கொணர்ந்து இக்கணபதித் தலத்தில் நாட்டப்பெற்ற காரணத்தால் இதற்குக் கணபதி அத்தனூர் அம்மன் என்ற பெயர் வழங்கி வருகின்றது. முற்காலத்தில் ஊஞ்சல் வனமாக இருந்தது. பின் அம்மன் உத்தரவின் கோயில் கட்டப்பட்டது. மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பெற்றது. முன்னே, தாழபுரம், நல்லூர் என்னும் பெயர்களால் வழக்கப்பெற்றுப் பின்னே இவ்வூர் இரண்டும் மறைந்துபோய், அவை அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் கிழக்குத் திசையிலிருந்து மேற்குத்திசைக்கு நாளடைவில் மாறி, மாறி, தற்போது கணபதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
குறிப்பு: பதிவுக்கு ஏற்ற புகைப்படம் இல்லை.
