பானு சப்தமி வழிபாட்டு பலன்கள்!
சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக இணைந்து வரும் நாள் பானு சப்தமி என்பதாகும். அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது என்கிறது சாஸ்திரம்.
பானு சப்தமி நாளில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கும் எதிரிகள் தொல்லை ஒழியும். சூரிய பகவானை விரதமிருந்து வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடிய வாய்ப்பு கைகூடி வரும். பானு சப்தமி தினம் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
பானு சப்தமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
பானு சப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை. விரதமிருந்து சூரியனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
பானு சப்தமியின் மகத்துவம்:
சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார்.
சனீஸ்வர பகவான் ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு சப்தமித் திதி.
பானு சப்தமி வழிபாட்டு பலன்கள்:
அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் வெற்றி உண்டாகும். பானு சப்தமி நாளில் சூரியனை மறக்காமல் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும். பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து சூரியனை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். நாளை அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும். சூரியனை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.
சூரிய காயத்ரி மந்திரம்:
“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா”
இந்த மந்திரத்தை தினமும் 3 முறை கூறி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
என்ற சூரிய காயத்ரி மந்திரங்களையும் சொல்லி வணங்கலாம்.
