பைரவரை வணங்கினால் எதிர்ப்பு நீங்கும்!
சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?
துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.
கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். கடவுளை வணங்குகிறோம். இருக்கிற கஷ்டங்களெல்லாம் எங்கோ பறக்கிறது.
பதவி, உத்தியோகம், வருமானம் என வாழ்க்கைத் தரம் உயர, அங்கே எதிர்ப்பு, எதிரி என உருவாக, மீண்டும் ஏதோவொரு சிக்கல், ஏதோவொரு பிரச்னை. எப்படியோ வருகிறது துக்கம். இந்த எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
தேய்பிறை அஷ்டமி. கால ரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும்.
ஒற்றுமை மேலோங்கும். இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடி ழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும்.
சாப, பாப, தோஷங்களை நீக்கும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர்
திருவிசநல்லூரில் சொர்ண பைரவி உடனாய சொர்ணாகர்ஷண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலை சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது. (யோகிநாதசுவாமி திருக்கோவிலுக்கும் கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்).
சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.
