சந்திர தோஷங்கள் நீக்கும் சந்திரசேகர் ஆலயம்!
கடலூர் மாவட்டம் கவரப்பட்டு என்ற ஊரில் அருள்பாளிக்கும் சந்திரசேகர் ஆலயத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர் சந்திரசேகர் என்ற திருநாமத்திலும் அம்பாள் காமாட்சி அம்மனாக அருள்பாளிக்கும் திருக்கோயில் இது.
ஆலயத்தின் சிறப்பு தனிச்சிறப்பு:
சிவத்தலமாகிய இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
புராணக் கதை:
தில்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தலத்து இறைவனின் திருநாமம் – சந்திரசேகரர். இதனால் அந்த ஊருக்குச் சந்திரசேகரபுரம் என்றே பெயர் அமைந்தது. தில்லை நடராஜரை வணங்கி வழிபடுவதற்காக வருகிற எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் சந்திரசேகரபுரத்துக்கு வந்து, அங்கேயுள்ள சந்திரசேகரேந்திரரை மனதாரப் பிரார்த்தித்துச் செல்வார்கள். இங்கேயுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர – சூரிய தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.
காலப்போக்கில், வனங்கள் ஊர்களாயின; ஊர்கள், இன்னும் விரிவாக வளரத் துவங்கின. அப்போது கவுரவர்கள் இங்கு வந்து சில காலம் தங்கியிருந்தனர். இதனால், சந்திரசேகரபுரம் எனும் ஊர், கவுரவப்பட்டு என்றானது. அது பின்னாளில் மருவி, கவரப்பட்டு என்றானது. தில்லைவாழ் அந்தணர்களும், தில்லையம்பதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நடராஜ பெருமானை வணங்கிவிட்டு, அப்படியே கவரப்பட்டு சந்திரசேகரரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆலயத்தின் பெருமை:
ஒரு காலத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் போது, இங்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது. அதேபோல் சிதம்பரம் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும் நாளில், இங்கும் திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறும். இந்தத் தலத்தின் நாயகி காமாட்சியம்மன், கருணையே உருவானவள்; கல்யாண வரம் தருபவள். தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரையும் காமாட்சி அம்பாளையும் வஸ்திரங்கள் சார்த்தி, வில்வார்ச்சனை செய்து, வழிபட்டால் திருமணத் தடைகள் யாவும் நீங்கும்; விரைவில் பெண்களின் கழுத்தில் தாலி குடியேறும் என்பது நம்பிக்கை ! அழகும் அருளும் ததும்பக் காட்சி தரும் காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு முன்னே வந்து நின்று, அவளை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.
பலன்கள்:
கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, அரசமரப் பிள்ளையாரை வணங்கி, அருணாசலேஸ்வரை தரிசித்தால், கடல் தொல்லை முதலான தீராத பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிடும்; காசி விஸ்வநாதரைப் பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; சந்திரசேகரரைக் கண்ணாரத் தரிசித்தால், சகல தோஷங்களும் தொலைந்து நிம்மதியுடன் வாழலாம். இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.
சன்னதிகள்:
இங்கு அருணாசலேஸ்வரர், காசிவிஸ்வநாதர், விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகியோரின் திருவிக்கிரகத் திருமேனிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனைகள்:
இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர – சூரிய தோஷங்கள் யாவும் விலகும். சந்தோஷம் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய்க் காட்சி தருகின்றனர். இவர்களை உரிய முறையில் வலம் வந்து வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்; வியாபாரம் வளரும்; உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம், வில்வம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
