எதிரிகள் தொல்லை நீங்க மாரியம்மன் வழிபாடு!
மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோயில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் மாரியம்மன். கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் மாரியம்மனுக்கு உரிய காயத்ரி மந்திரம் இதோ…
மாரியம்மன் வழிபாடு:
பொதுவாக அம்மன் என்றாலே அதீத சக்தி வாய்ந்த உக்கிர தெய்வங்கள் என்பதால் அந்த தெய்வங்களை வீட்டில் வழிபடுவதை விட அம்மன் கோயில்களுக்கு சென்று அம்மனை வழிபடுவது சிறந்ததாகும். அப்படி வழிபடும் போது அம்மன் தெய்வங்களுக்கு மிகவும் பிரியமான கேழ்வரகு கூழ் நைவேத்தியம் செய்து வழிபடலாம் அல்லது பொங்கல் வைத்தும் வழிபடலாம். அம்மன் தெய்வங்களைப் வழிபடுவதற்குரிய சிறந்த காலமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் மாரியம்மன் கோயிலுக்கு சென்று மாரியம்மனை வழிபடுவது சாலச் சிறந்ததாகும்.
மாரியம்மன் வழிபாட்டிற்குரிய தினங்கள்:
மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட விரும்புவார்கள் வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் காலை அல்லது மாலையில் சுப முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் அம்மனை வழிபடலாம். அம்மன் தெய்வங்களுக்குரிய ஆடி மாதத்தில் வருகின்ற ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும். மற்ற காலங்களில் மாரியம்மனுக்கு கூழ் படைத்து அல்லது பொங்கல் வைத்து வழிபட முடியாதவர்களும் ஆடி மாதத்தில் மட்டுமாவது மேற்கூறிய வழிபாட்டை செய்வது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.
மாரியம்மன் காயத்ரி மந்திரம்:
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை சொன்னால் அம்மை வராது. அம்மை வந்தவர்கள் வீட்டில் இந்த மந்திரத்தை சொன்னால் அம்மன் அருளால் அம்மை இறங்கும். தீராத நோயுடையவர்கள் தினந்தோறும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிய பிறகு வேம்பினை உண்டு வர நோயின் வீரியம் குறையும்.
மாரியம்மன் வழிபாடு பலன்கள்:
சக்தி வாய்ந்த காக்கும் தெய்வமாக மாரியம்மன் தேவி இருக்கிறார். பொதுவாக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அம்மை நோய்கள் மற்றும் இதர உடல்நல பாதிப்புகள் நீங்கவே மாரியம்மனை வழிபடுகின்றனர். எனினும் மாரியம்மனை வழிபடும் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சக வியாபாரிகளின் கடும் போட்டி மற்றும் மறைமுக சதிச் செயல்களால் வியாபாரம், பண நஷ்டம் போன்றவை நீங்கி லாபங்களை பெருக்குகிறது.
மாரியம்மன் பரிகாரங்கள்:
மாரியம்மன் தெய்வத்தின் நல்லருள் என்றென்றும் உங்களுக்கு கிடைத்திருக்க ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் கூழ் காய்ச்சி, மக்களுக்கு அளிப்பது உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் உண்டாக்கும். மேலும் இந்த ஆடி மாதத்தில் ஏழு கன்னிப்பெண்களுக்கு மஞ்சள் நிற புடவையை வஸ்திர தானமளிப்பதும் உங்களுக்கு மாரியம்மன் தேவியின் முழுமையான அருள் கிடைக்க சிறந்த பரிகாரமாக இருக்கிறது.