Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalகோகுலாஷ்டமி ஸ்பெஷல் ! -கிருஷ்ணன் ஏன் வந்தான்

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ! -கிருஷ்ணன் ஏன் வந்தான்

ஆயர்பாடியில் உள்ள எல்லா வீடுகளிலும் நுழைந்து கண்ணன் வெண்ணெய், தயிர், பால் ஆகியவற்றைத் திருடினான் என்பது எல்லோரையும் பரவசப் படுத்தும் ஒன்று.

கண்ணன் ஏன் திருட வேண்டும்? தன்னிடம் இல்லாததை அடுத்தவரிடம் திருடுவது திருடர்களின் பழக்கம். இதன்படி, கண்ணனிடம் எது இல்லை? கண்ணனிடம் இல்லாதது உள்ளத்தில் அழுக்கு! மற்றவர்களிடம் அது நிறைய இருக்கும். அவர்கள் உள்ளத்தோடு அந்த அழுக்கையும் சேர்த்துப் பறிக்கக் கிளம்பிய கண்ணனை, இதனால்தான் மகான்கள் ‘சித்த சோரன்’ என்று அழைக்கிறார்கள்.

சுவாமி கிருஷ்ணாவதாரம் எடுத்ததே வெண்ணெய் சாப்பிடத்தான். வைகுண்டத்தில் ஓயாமல் பூஜை செய்து அமிர்தத்தை நைவேத்தியம் செய்து ஸ்வாமிக்கு சலிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். ‘எத்தனை நாள்தான் அமிர்தத்தையே சாப்பிடுவது?’ என்று நினைத்தாராம் கிருஷ்ணர்.

ஒரு நாள்… வைகுண்டத்தில் வழக்கமான பூஜைகள் நடந்தன. அப்போது பூமியில், யசோதை காய்ச்சிய வெண்ணெயின் வாசனை வைகுண்டத்தை அடைந்தது. அவ்வளவுதான் ஸ்வாமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘திகட்டிப்போன இந்த அமிர்தத்தை விட்டுவிட்டு, ஒரு நொடிப் பொழுது பூமிக்குப் போய், அந்த வெண்ணெயை விழுங்கி வரலாமே! இதற்காக ஓர் அவதாரம் எடுத்தாலும் பரவாயில்லை!’ என நினைத்தாராம் ஸ்வாமி.

அதிலும் ஒரு சங்கடம். பூஜை நடக்கும்போது பாதியில் தான் மறைந்து போனால், அங்குள்ள பக்தர்களின் மனம் கஷ்டப்படும். அவர்கள் ஒரு நொடிப் பொழுது கண்களை மூடித் திறந்தால் போதும். அதற்குள் ஓர் அவதாரம் எடுத்து பூமிக்குச் சென்று வெண்ணெயை விழுங்கி விட்டு வரலாம். ஆனால், அந்தப் பக்தர்களோ இமை கொட்டாதவர்கள். என்ன செய்வது? இக்கட்டான நிலை ஸ்வாமிக்கு.

அதே நேரத்தில்… அலங்காரம் முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு வாசனை தூபம் காட்ட ஆரம்பித்தனர். மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகை, ஒரு கண நேரம் ஸ்வாமிக்கும் பக்தர்களுக்கும் இடையே திரை போட்டது போல் இருந்தது. ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்!’ என்று தீர்மானித்த ஸ்வாமி, பூமியிலே இறங்கி ஓர் இரவில் ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர ஆயர்பாடி வந்து, ஆசை தீர வெண்ணெயைத் தின்று, பலவிதமான லீலைகள் செய்து கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டு, தனது இருப்பிடமான வைகுண்டத்துக்குத் திரும்பி விட்டார். நடந்தது எதையும் அறியாத பக்தர்கள், தூபம் முடிந்ததும் தீபம் காட்டினர்.

‘காலத்துக்கு அப்பாற் பட்டவன் கடவுள்’ என்னும் இந்த அற்புதமான தத்துவத்தைக் கொண்ட கருத்தமைந்த நம்மாழ்வாரின் பாடல் இது:

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அத்தூபம் தராநிற்கவே
அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு
உண்ணப்போந்து இமிலேற்றுவன்கூன்
கோட்டியை ஆடினை கூத்து
அடலாயர்தம் கொம்பினுக்கே

வெண்ணெய் சாப்பிடுவதற்காக ஆயர்பாடியை நாடி வந்த கண்ணனுக்கு, ஏதும் அறியாத யசோதை வேண்டிய அளவு வெண்ணெய் கொடுக்காததால் தான், கண்ணன் வீடுதோறும் வெண்ணெய் திருடக் கிளம்பினான். நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளப் போகும் கண்ணனின் அந்த வெண்ணெய்த் திருட்டை, அழகுற விவரித்துள்ளார்!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − two =

Most Popular