திருமணத்தடை நீக்கும் நரசிம்மர் விரத வழிபாடு!
நரசிம்மரைக் கிரக தோஷம் இருப்பார்கள், அதற்கான பரிகாரம் செய்ய விரும்புவர்கள் அனைவரும் வழிபடலாம். நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் பெற்ற நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாக பலனும் காண முடியும்.
திருமணத்தடை நீங்க பரிகாரம்:
நம் வீட்டுப் பூஜை அறையில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து, மலர் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 48 நாள்களாவது விரதம் இருந்து பூஜித்து வர வேண்டும். அதிலும் மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவர் நரசிங்கமாக அவதரித்தது மாலை நேரத்தில்தான்.
எந்த நாட்களில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்:
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மட்டுமின்றி, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்த்து, நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஸ்ரீநரசிம்மரை பிரதோஷத்தன்று விரதம் இருந்து வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும். ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம்.
நரசிம்மர் ஸ்லோகம்:
அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்.
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
பலன்கள்:
நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்து வர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம். திருமண தடை உள்ளவர்கள் விரதம் இருந்து பிரதோஷ தினத்தன்று பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும் என்பது உறுதி .
