வெண்குஷ்டம் நோய் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
திருவாரூர் மாவட்டம் திருத்தலையாலங்காடு என்ற ஊரில் உள்ள கோயில் நர்த்தனபுரீஸ்வரர். இங்கு நர்த்தனபுரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். பாலாம்பிகை, உமாதேவி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வ மரமே தல விருட்சமாக திகழ்கிறது. தை அமாவாசை, மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியபடி உள்ளது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சன்னதியில் விநாயகர், விசுவநாதர், தல விநாயகர், முருகன், பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. அழகான திருமேனியுடன் மூலவர் காட்சி தருகிறார். அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் “எண்கண்’ கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண் குடவாயில் பெருவேளூர் முதலிய திருமறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.
வெண்குஷ்டம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்தால் சிறப்பான பலன் உண்டு என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில், நீராடி இறைவனுக்கு தீபமேற்றி மன உறுதியுடன் வழிபட வெண்குஷ்டநோய் நீங்கப்பெறும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார்.
மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது. கபில முனிவர் பூஜித்த தலம்.சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
