Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalஶ்ரீ பராசக்தி மஹிமை:

ஶ்ரீ பராசக்தி மஹிமை:

திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் செய்த ஆஸ்சர்யமான லீலை. காமக்கோட்டத்து நாயகியான பராசக்தி ஸர்வ ஸாந்நித்ய மூர்த்தியாக காஞ்சியில் விளங்குகின்றாள் என்பதற்கு ப்ரமாணம்.

ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதாளின் ப்ரதம சிஷ்யை ஶ்ரீமதி ராஜலக்ஷ்மீ சூர்யநாராயணன் மாமி. மாமி ஸாக்ஷாத் பவானியின் ஸ்வரூபம் என்பதை அவரை பார்த்த மாத்திரத்தில் ஒருவர் உணர்ந்து விடலாம். ஸர்வ தேஜஸ் பொருந்தினவள்.

காஞ்சி மஹாபெரியவாள், ச்ருங்கேரி பெரியவாள் இருவாராலும் கௌரவிக்கப்பட்டவள். “லோபாமுத்ரா” என்று ச்ருங்கேரி மஹாஸந்நிதானத்திடமிருந்து பட்டம் பெற்றவள்.

காஞ்சி மஹாபெரியவாள் ஒரு குழந்தையிடம் “காமாக்ஷி எப்படியிருப்போன்னு தானே கேட்டே!! தோ ராஜத்தைப் பாரு !! இவளை மாதிரி தான் இருப்போ!!” எனக் கூறும் அளவுக்கு காமாக்ஷி கடாக்ஷத்தைப் பெற்றவள்.

ஒரு ஸமயம் காமாக்ஷி ஸந்நிதி காயத்ரி மண்டபத்தில் அமர்ந்து ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வருகிறாள். அருகில் யாரோ ஒரு திவ்ய ஸ்த்ரீ அமர்ந்து தன்னை கவனித்துக் கொண்டே இருப்பது போல் மாமிக்கு தோன்றுகிறது.

பளபளவென செம்பட்டுடுத்தி, நவரத்னங்கள் பதித்த அட்டிகை, ஹாரம், கைவளை, கொலுசுகள் அணிந்த ஒரு ஸ்த்ரீ தான் படிக்க படிக்க அதை ஆமோதிப்பது போல் தலையாட்டி வருவதைக் காண்கிறாள் மாமி.

ஸர்வாலங்கார பூஷிதையாக, காமாக்ஷி போலவே இருக்கும் இந்தப் பெண் யார் என எண்ணியபடியே ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கின்றாள்.

“மஹாஸக்தி குண்டலினி பிஸதந்துதனீயஸீ” எனும் வரியில் “மஹாஸக்தி” எனும் நாமத்தை “மஹாச(ஷ)க்தி” என்று படித்து விடுகின்றாள்.

திடீரென அருகிலிருந்த ஸ்த்ரீ “அது மஹாச(ஷ)க்தி இல்லேம்மா!! மஹாஸக்தி!! நன்னாப்பாரு!! மஹாசக்தின்னு பின்னாடி ஒரு நாமம் வர்றது” என கூறுகின்றாள்.

(மஹாஸக்தி — மிகவும் ஆஸக்தி பொருந்தினவள். குண்டலினி சக்தி
மஹாசக்தி — மிகப் பெரிய சக்தியானவள்)

பேப்பரும் பேனாவும் தேடுகிறாள் மாமி. குறித்து வைத்துக் கொள்ள!!

திடீரென அந்த ஸ்த்ரீ ம்ருதுவான வசனத்துடன் “இதெல்லாம் தேவையில்லை!! நான் எங்க போய்ட்டேன்!! உனக்குள்ளே உங்கிட்டயே தான் இருக்கேன்!!” என்றபடி படீர் ஏன தத்க்ஷனமே மறைந்து விட்டாள்

“வித்யுத் கோடி ஸமப்ரபாம்!!” என ஜயதுர்கா த்யானம் கூறுகிறதே!! அது போல் கோடி மின்னல் தோன்றி மறைந்தது போலோரு தேஜோ ரூபத்தை உணர்ந்தாள் ராஜம் மாமி!!

எப்பேற்பட்ட கடாக்ஷம் இது!! முப்பத்து முக்கோடி தேவதைகளும், பஞ்சப்ரேத மூர்த்தங்களுக்கும் கிடைக்காத தர்சனம் ராஜம் மாமிக்கு கிட்டியது!! காமாக்ஷி!! காமாக்ஷி!! என கண்கள் ஆனந்த பாஷ்பம் பெருக அன்னையை ஸதா நமஸ்கரித்தாள் மாமி!!

காமாக்ஷி ப்ரத்யக்ஷ தெய்வம் என நிரூபித்து விட்டாள்!! ஸத்யமான இச்சம்பவம் நடந்து ஐம்பது வருடத்திற்க்குள் தான் இருக்கும்!!

பின் நடமாடும் காமாக்ஷி எனவே வாழ்ந்து காமாக்ஷியின் திருவடிகளில் கலந்தும் விட்டாள். காமாக்ஷியின் கீர்த்திக்கு வேறு சான்றும் வேண்டுமோ!!

லலிதையே திருத்திய லலிதா ஸஹஸ்ரநாமம்!!

இன்றும் அன்னை காக்ஷியளித்துக் கொண்டு தான் இருக்கிறாள்!! நம் ஊனக் கண்களுக்கு தெரியவில்லை!! மஹான்கள் கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

காமாக்ஷி ஸாதாரண சக்தி இல்லை!! மஹாசக்தி!! காலீ முதல் கமலை ஈராக தசமஹாவித்யைகளின் ஸர்வ ஸமஷ்டியும் ஐக்யமான மஹாசக்தி. காமாக்ஷியை காலியாகவும் கண்ட மஹான்கள் உண்டு!! மஹாஷோடஷீயாகவும் கண்ட மஹான்கள் உண்டு. கௌரீயாக கண்ட மஹான்களும் உண்டு!!

க்ஷணத்திற்கு க்ஷணம் சக்தியின் தீக்ஷண்யம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் கருவறை அது!! சில ஸமயம் மந்தஹாஸம் இருக்கும் அவளிடம்!! சிலஸமயம் அட்டஹாஸ சிரிப்பு தோன்றும்!! சிலஸமயம் ஆனந்தலஹரியாய் இருப்பாள்!! சிலஸமயம் மோனத்தில் ஆழ்ந்திருப்பாள்!!சில ஸமயம் காலியாகவும் தோன்றுவாள்!! சிலசமயம் குழந்தையாகவும் காட்சியளிப்பாள்.

ஸாக்ஷாத் ஸம்பூர்ண லலிதா பரா பட்டாரிகா இவள். எவளுக்கு மேல் ஒரு வஸ்து இல்லையோ அந்த லலிதை இவள்!! மஹாத்ரிபுரஸுந்தரி இவள்!! மஹாராஜராஜேச்வரீ இவள்!! மஹா ஷோடஷீ இவள்!!

துவளேன் ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே

காமாக்ஷி சரணம்
ஶ்ரீமதி ராஜலக்ஷ்மீ மாமி கீ ஜே!!

ஶ்ரீமாத்ரே நம:
காமகோடிகாயை நம:
ஸுவாஸின்யை நம:
காமாக்ஷ்யை நம:
லலிதாம்பிகாயை நம:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + eleven =

Most Popular