Tuesday, October 17, 2023
HomeAanmeega Thagavalgalசிவராத்திரி அன்று மட்டுமே தரிசனம் தரும் திருவாசகம்

சிவராத்திரி அன்று மட்டுமே தரிசனம் தரும் திருவாசகம்

திருவாசகம் இறைவனால் எழுதப்பெற்றது. இந்நூலில் இறைவனை எப்படி அடைவது,இறைவனின்
பெருமைகள்,அண்ட கோளங்களின் விந்தைகள்,இரகசியங்கள் இயக்கங்கள்,அவைகளை இயக்கும் மூலப்பொருள்கள்,சூட்சும நிலைகள் யாவும் விவரிக்கப்பட்டுள்ளன.

ஆத்ம சாதகர்களுக்கு உயிராக விளங்கக்கூடியது திருவாசகம். இந்நூலின் பெருமையை அருளுணர்வால் உணர்ந்து இறைதரிசனம் பெற்றார் இராமலிங்க சுவாமிகள். வள்ளலாரைப் போன்றே பல ஆத்மசாதகர்கள் இந்நூலின் வழியே சென்று, சாதனையில் வெற்றி கண்டுள்ளார்கள்.

கனக சபையிலிருக்கும் இந்நூலை யாரிடம் ஒப்புவிப்பது என்ற பிரச்சனை வந்தது.ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வைராக்கியத்தைக் கொண்டனர்.

அது பொழுது ஒரு அசரீரி கேட்டது;- “இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள்.அது கங்கையை
சுற்றியிருக்கும் யாரிடம் போய் சேருகின்றதோ -அவரிடம் இருக்கட்டும்” என்றது.

அவ்வாறே அந்நூல் சிவகங்கையில் விடப்பட்டது.ஆத்ம சாதகரும் சிவநேசச்செல்வருமாகிய ஒரு பெரியவரிடம்-அந்நூல் வந்து நின்றது.அவர்,அந்நூலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு
சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே அகத்திற்கு ஏகினார்.

அன்று முதல் அவ்விடத்திற்கு ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடையார் மடம் என்று பெயர் வழங்கலாயிற்று.பெரியவர்க்கு பின் ஒருவர் பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்தனர்.

இச்சமயம், கர்னாடகா யுத்தம் வந்தது.கோவில்களும், மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் வரை பரவியது.

அப்பொழுது,அம்பலத்தாடையார் மடத்து பத்தாவது பட்டத்தை வகித்து வந்தார் ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்டு அதிர்ந்தார்.கண் கலங்கினார். இறைவனால் கைச்சாத்து இடப்பட்ட அத்தெய்வத் திருநூலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று பயந்தார்.

பரம்பொருளிடம் சென்று அழுதார்.உண்பதை விட்டு உயிரில்வதியும் சிவபெருமானை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார். நாட்கள் கடந்தன.யுத்தம் கடுமையாகியது. அழிவுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. சுவாமிகள் நித்திரையை விட்டார்.சிவதியானத்தை தீவிரமாக்கினார். உலகியல் நினைப்பொழித்தார். திருவாசகத்தை காக்க வேண்டுமே
என்ற ஒரே சிந்தனையில் இருந்தார்.ஓம் சிவாய நம என்ற நாமத்தில் ஆழ்ந்திருந்தார்.

அடியாரின் துயர் கண்ட இறைவன்,இனியும் கலங்க வைப்பது முறையல்ல என்றெண்ணி நாகலிங்க சுவாமிகளின் நெற்றிப் பொட்டில் பூரணமாய் பரிணமிக்கும் இடத்தை சுட்டி காட்டினார்.

சுவாமிகள் களிப்பு கொண்டார்.இறைவன் சுட்டிக் காட்டிய இடமான ஞான பூமியாம்-புதுவை என்பதனைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆத்மசாதனைக்கு மிகவும் உகந்த இடமானதும், சித்தர்களையும் ஞானிகளையும் தன் பால் கவர்ந்திழுக்கும் புண்ணிய பூமியாம்- புதுவை தான்,” திருவாசகத்தை” பாதுகக்க சரியான இடம் என்ற இறைவன் தீர்ப்பைக் கண்டு வியந்தார். இறைவன் கருணையை கண்டு மகிழ்ந்தார்.

திருவாசகம் கொண்ட வெள்ளி பெட்டகத்தை பட்டுத் துணியால் மூடி,சிரத்திலே சுமந்து தொண்டர்கள்
இருவரை அழைத்துக் கொண்டு-புறப்பட்டார்-புதுவைக்கு. புயலினின்றும் தப்பித்து கடலூர் வழியாக புதுவை வந்து சேர்ந்தார்.

புதுவையில் ஒரிடத்தில் சிறு குடில் அமைத்து திருவாசகப் பெட்டகத்தை வைத்து சிவபூஜை செய்து வந்தார். ஆழ்ந்த சிவத்தியானத்தில் ஈடுபட்ட நாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. அவை சித்துக்களாக மாறின. அன்பர்கள் பலரும் சுவாமிகளை தேடி வந்து,குறைகளைக் கூறி போக்கிக் கொண்டனர். சுவாமிகளின் பெருமைகளை பலரும் உணர்ந்தனர்.

இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நாளை எதிர்ப்பார்த்திருந்தார்.

ஒருசமயம் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அருகிலிருந்த பட்டத்து தம்பிரான் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவிக்க- சீடன் பக்குவ நிலைக்கு வந்திருப்பதை உணர்ந்து,அக்கணமே தமது 10 வது பட்டத்தை 11வது பட்டமாக சீடனுக்கு அளித்து பீடத்தில் அமர்த்தினார்.அன்றிரவே தாம் இறைவனோடு கலக்கும் செய்தியை இறைவனின் திருக்குறிப்பின் மூலம் உணர்ந்தார்.

இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலேயே சென்றது.சுவாமிகள் மௌனத்தையே கடைப்பிடித்தார்.தம் சீடர் செய்ய வேண்டிய முறைகளை மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் வந்தது.சிவத்தினுள் சிவமாகும் நேரமும் வந்தது. சிவத்தோடு ஐக்கியமாகும் ஜீவன் முக்தி பெற்றார்.

உலகம் உய்ய இறைவன் அருளிய திருவாசகத்தைப் போற்றி பாதுகாத்து, புதுவைக்கு கொண்டு வந்த பெருமை ஸ்ரீ நாகலிங்கசுவாமிகளையே சாரும். சுவாமிகள் தங்கியிருந்த இடத்தினுள்ளே அவரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தெய்வீக இடத்திற்கு அம்பலத்தாடையார் மடம் என்று பெயர்.

இம்மடம் அமைந்துள்ளதால் அத்தெருவிற்கு அம்பலத்தாடையார் மடத்து வீதி என்று பிரஞ்சு அரசு பெயர் சூட்டியுள்ளது. திருவாசகம் அமைந்த வெள்ளிப் பெட்டகம் அன்றாடம் பூஜிக்கப் பட்டு வருகிறது.ஒவ்வோர் ஆண்டும் #சிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =

Most Popular