வந்தாள் மகாலக்ஷ்மியே – என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
வரம் தரும் அன்னையே வணங்குவோம் உன்னையே இன்றும் என்றும் என்றென்றும்!
வரலக்ஷ்மி விரதம் கர்னாடகாவிலும், ஆந்திராவிலும், தமிழகத்திலும் மிக உற்சாகமாக பெண்கள் ஆழ்ந்து பூஜைகள் செய்து கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று.
பூஜை செய்யும் போதும் செய்து முடித்த பிறகும் உண்டாகும் அமைதிக்கு எதுவுமே இணையில்லை. மிகவும் ஸ்ரத்தையோடு செய்ய வேண்டும் என்பதே அடிப்படை.
அடியேனின் குடி வாழ தனம் வாழ – குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே – என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
வரம் தரும் அன்னையே வணங்குவோம் உன்னையே!!
வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி.
மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) செய்வார்கள்.
மற்ற நாட்களில் எப்படியிருந்தாலும் இந்த ஒரு நாள் மற்ற கவலைகளை கஷ்டங்களை மறந்து, அம்பிகையை ஆத்மார்த்தமாக, தன் வீட்டுப்பெண்ணாக பாவித்து செய்வார்கள்.
தனக்கு ஒரு மகள் இருந்தால் அவளை எப்படியெல்லாம் ஆராதிப்பார்களோ அது போல் வரலக்ஷ்மியை தன் செல்ல மகளாக பாவித்து, அலங்காரம் செய்து, விதவிதமான உணவு வகைகளை நைவேத்யம் செய்து, பூச்சூட்டி, புத்தாடை புனைந்து, உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிப்பார்கள்.
இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை.
நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.
பூஜையை குரு முகமாக எடுத்துக் கொள்ளாதவர்கள், அம்பிகை மேல் இருக்கும் பலவிதமான பாடல்களினால், பதிகங்களினால் அவளை ப்ரார்த்தனை செய்யலாம். இல்லாவிட்டால் மனதை ஒருமுகப்படுத்தி அவளை சில நிமிடங்கள் தியானிக்கலாம்.
வரலக்ஷ்மி விரதம் பண்டிகை எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள எளிமையான வழி – பெரும் மகானான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்லி விட்டுப்போன வழி.
ஸ்ரீ ராகக் கீர்த்தனையான ”ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம்” மிக அற்புதமான கீர்த்தனையில் தெளிவாகச் சொல்கிறார்
”ஸ்ராவண பெளர்ணமி பூர்வஸ்த்த சுக்ர வாரே”என்று. ஸ்ராவண (ஆவணி)
மாதத்து பெளர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக் கிழமைக்கு உரியவளே என்று பொருள்.
”வரலக்ஷ்மி, ராவே மாயிண்டிகி” என்ற தெலுங்குப் பாடலும் புகழ்பெற்றது -.
” வாத்சல்யமாக வாடி” என்றழைப்பது நெருக்கததை ஏற்படுத்துகிறது .
”ராரா மா இண்டி தாக”, என்று ராமரை தியாகராஜர் கூட அழைக்கிறார் அல்லவா!!
முதல் நாளே கலசத்தை தயார் செய்து மாவிலை சாற்றி, தேங்காய் வைத்து, அம்பாள் முகத்தை வைத்து, அலங்காரங்கள் செய்து, அடுத்த நாள் காலையில் குளித்து தன்னையும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, அம்பிகையை வீட்டு வாசலில் இருந்து உள் அழைத்து வருவார்கள்.
பின் வகைவகையான கொழுக்கட்டைகள், சர்க்கரைப் பொங்கல், வடை, பச்சரிசி இட்லி, விதவிதமான பழங்கள், ஆகியவற்றை தயார் செய்து கொண்டு, பதினாறு விதமான உபசாரங்களை (ஆராதனைகள்) செய்வார்கள். விதவிதமான நாமாவளிகள், பாடல்கள் ஆகியவற்றினால் ஆராதித்து, நைவேத்யம் செய்து, சுமங்கலிப்பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் தருவார்கள்.
மாலையில் விளக்கேற்றி பாடல்களாலும், ஸ்தோத்திரங்களாலும் துதிப்பார்கள்.
மறு நாள் காலை மறு பூஜை செய்து, மாலையில் மீண்டும் ஆராதனைகள் செய்து, இரவு பிரியாவிடை அளிப்பார்கள்.
அவள் எங்கேயும் செல்ல மாட்டாள்.
வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திலேயே அவளை
ஐக்கியம் செய்வார்கள்..
பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு அழகு உருவம் எடுத்து உலவி நடந்து வந்தாள் மகாலக்ஷ்மியே
வரலஷ்மி விரத நாள் பார்த்து வந்தருள் புரிகிறாள்.
சுற்றத்தார்கள் நண்பர்கள் என அனைவரையும் .அழைத்துக் கொண்டாடும் நட்பும், உற்சாகமும், அன்பும், ஆனந்தமும் ததும்பும் பண்டிகை இது. ..
எல்லா மதங்களிலும் அன்பே முதன்மையானது – அதுவே இறுதியானதும் கூட. அந்த அன்பை பெருக்கி வெளிப்படுத்தும் பல வகையான வழிகளில் இவ்வாறான பண்டிகைகளும் ஒன்று தானே.
எத்தனை ஏழ்மையிலும் தன்னால் முடிந்த வரை பக்தியுடன் இப்பூஜை செய்பவர்களுக்கு அவள் நிச்சயம் அருள் பொழிவாள் – அப்போது கஷ்டப்பட்டாலும், தர்மத்துக்கே இறுதியில் வெற்றி என்பது போல, நிச்சயம் வருங்காலம் வளமானதாக இருக்கும். இது பணத்தினால் வரும் கஷ்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த காரணமாக இருந்தாலும் சரி, அவள் கைவிடுவதேயில்லை. நடுவில் கடந்து போகும் காலங்களும் எப்படியோ அதிக கஷ்டம் தெரியாமல் போய்விடும்.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !
