அஷ்டமி திதி இருக்கும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் உகந்ததோ அப்போது பைரவரை வழிபடலாம். இருந்தாலும், குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் வெள்ளிக்கிழமையும், அஷ்டமி திதியும் ஒன்றாக வருவது மிகவும் சிறப்பு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வங்களில் கால பைரவரும் ஒருவர். அதாவது பல வகையான கஷ்டங்களுக்கு உடனடி தீர்வைத் தரும் சக்தி இவருக்கு உண்டு என்று சொன்னால் அது கட்டாயம் பொய்யாகாது.
குறிப்பாக ஒருவருக்கு அடிக்கடி எதிர்பாராமல் விபத்து ஏற்படுகிறது என்றாலும், பைரவரை அஷ்டமி திதியில் வழிபட வேண்டும். பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகள் எதுவுமே நம்மை நெருங்காமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த பைரவருக்கு உண்டு. நமக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு உடனடி தீர்வு காண அஷ்ட பைரவரை, இந்த இந்த அஷ்டமி திதியில் எப்படி முறைப்படி பூஜை செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கம் போல் உங்கள் வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு பைரவரின் படம் இருந்தால், அதற்கு சிவப்பு நிற பூ சூட்ட வேண்டும். பல பேர் வீடுகளில் காலபைரவர் படம் இருக்காது. ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொண்டு, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, சிகப்பு துணியால் செய்யப்பட்ட திரிபோட்டு, அல்லது கடைகளில் விற்கும் சிகப்பு நிற திரியை வாங்கிக் கொண்டாலும் பரவாயில்லை, அந்த எண்ணெயில் ஒரு மிளகு போட்டு தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஜோதி வடிவில் பைரவரைக் காணலாம். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் அந்த அகல் தீபத்தை பைரவராக நினைத்துக்கொண்டு, அஷ்ட பைரவ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் உங்களுக்கான அஷ்டபைரவர் மந்திரம் இதோ!
ஓம் அசிதாங்க பைரவாய நமஹ ஓம்!
ஓம் ருரு பைரவராய நமஹ ஓம்!
ஓம் சண்ட பைரவராய நமஹ ஓம்!
ஓம் க்ரோதன பைரவராய நமஹ ஓம்!
ஓம் உன்மத்த பைரவராய நமஹ ஓம்!
ஓம் கபால பைரவராய நமஹ ஓம்!
ஓம் பீஷண பைரவராய நமஹ ஓம்!
ஓம் சம்ஹார பைரவராய நமஹ ஓம்!
இந்த மந்திரத்தை உச்சரித்த பின்பு, இறுதியாக ‘ஓம் கால பைரவாய நமஹ ஓம்’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மந்திரத்தை உச்சரித்த பின்பு இறுதியாக உங்களால் முடிந்த பிரசாதத்தை நைவேத்தியமாக செய்து வைத்து தீப, தூப ஆராதனைகள் காட்டி பைரவரை மனதார வேண்டிக் கொண்டு, உங்களுடைய பூஜையை முடித்துக் கொள்ளலாம். தொடர்ந்து எட்டு வாரங்கள் தேய்பிறை அஷ்டமி பூஜையை எவரொருவர் செய்து முடிக்கின்றாரோ, அவருக்கு தீராத கஷ்டம் கூட, ஒரு தீர்வுக்கு வரும் .
