ஆழ்வார்களில் சிறந்தவர் திருமங்கையாழ்வார்!
12 ஆழ்வார்களில் முக்கியமானவரும் ஆழ்வார்களில் சிறந்தவருமான திருமங்கையாழ்வார் ஆவார்.
திருமங்கையாழ்வார் வாழ்க்கை வரலாறு:
திருமங்கையாழ்வார் திருக்குறையலூரில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் நீலன். இவர் சோழ மன்னனிடம் சேனாதிபதியாக இருந்து பல வெற்றிகளை பெற்றவர். அதனால் பரகாலன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.
குறுநில மன்னனான திருமங்கையாழ்வார்:
மன்னனே இவருடைய வீரத்தைப் பாராட்டி திருமங்கை நாட்டிற்கு குறுநில மன்னன் ஆக்கினான். வைணவ மரபில் பிறந்த குமுதவல்லியை திருமணம் செய்தார்.
தினமும் அன்னதானம்:
திருமங்கையாழ்வார் தினமும் ஆயிரம் அடியவர்களுக்கு அன்னம் இடவேண்டும் என்ற தர்மத்தை நாள்தோறும் செய்து வந்தார். அதன் காரணமாக தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தார். மேலும் அன்னமிடும் தர்மத்தை நிறுத்தாமல் வழிப்பறி செய்து அந்த திட்டத்தை நிறைவேற்றி வந்தார்.
திருமாலின் திருவிளையாடல்:
திருமால் இவருடைய பெருமையை உலகறியச் செய்ய எண்ணம் கொண்டார். அதன் காரணமாக திருமாலும் திருமகளும் புதுமணத்தம்பதியர் போல வேடமிட்டு காட்டு வழியே திருமங்கையாழ்வார் காண அத்தனை நகைநட்டு பொன்மணிகள் ஆபரணங்கள் அணிந்து வந்து கொண்டு இருந்தார்கள்.
திருமங்கையாழ்வாருக்கு உபதேசித்த திருமால்:
உடனே திருமங்கையாழ்வார் அவர்களிடமும் களவாட முயன்றார். அப்போது திருமால் தன்னுடைய சுயரூபத்தை காண்பித்து எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். அன்றுமுதல் மனம் மாறிய அவர் தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தும் திருமாலுக்கே என்று முடிவு செய்து அனைத்தையும் திருமாலுக்கே அர்ப்பணித்தார்.
திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள்:
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக பாசுரங்களைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. இவர் இயற்றிய பாடல்கள் பெரிய திருமொழி. திருக்குறுந்தாண்டகம். திருநெடுந்தாண்டகம். திருவெழுகூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் முதலியவைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் கூறியபடி பெண்கள் மடலேறுதல் கூடாது என்ற விதியை மீறியவர் இவர். மடலேறுதல் என்றால் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று ஒரு ஆண் ஊரறிய சொல்லுவதே மடலேறுதல் ஆகும்.
திருமாலின் சாரங்கவில்:
ஆனால் இவரோ பெரிய திருமடலில் திருமால் மீது தான் கொண்ட காதலை உலகறிய ஊர்வன் நான் என்று குறிப்பிடுகிறார். இவரைப் பற்றி மேலும் ஒரு குறிப்பு உண்டு. அதாவது திருமாலின் கையிலிருக்கும் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாக தான் திருமங்கையாழ்வார் பிறந்தார் என்று கூறுவோரும் உண்டு. வைணவ சமூகத்திற்கு திருமங்கையாழ்வார் ஆற்றிய தொண்டு அளப்பரியது என்றே கூறலாம்.
