நவக்கிரக தோஷங்கள் நீக்கும் வைத்தமாநிதி பெருமாள் ஆலயம்!
தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் அருள்பாளிக்கும் வைத்தமாநிதி பெருமாள் ஆலயத்தின் வரலாற்றை இப்பதிவில் காணலாம்…
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்திலும் தாயார் குமுதவல்லி நாயகி, கோளூர் வல்லி நாயகி என்றும் அருள்புரிந்து வருகிறார். இக்கோவிலின் உற்சவர் நிஷோபவித்தன் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தீர்த்தம் தாமிரபரணி மற்றும் குபேர தீர்த்தம் ஆகும்.
ஆலய வரலாறு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 87 வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய் சேருகின்றன. நாராயணன்இந்த நிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு “வைத்தமாநிதி’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தல பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளை பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு அதர்மபிசுனம் என்ற பெயரும் உண்டு.
ஆலய அமைப்பு:
இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்க தலங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளூர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்)
பிரார்த்தனைகள் :
நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்கின்றனர்.
