ஆயுள் விருத்திக்கு வழிபடும் கோயில் இது!
திருவாரூர் மாவட்டம் முகுந்தனூர் என்ற ஊரில் உள்ளது வலம்புரி விநாயகர் கோயில். இங்கு மூலவர் மற்றும் உற்சவர் இரண்டுமே வலம்புரி விநாயகர் தான். அரசு மற்றும் வேம்பு இங்கு தல விருட்சமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், ஆகிய விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது.
முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுப் பகுதியினர் பய பக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோயிலில் கிழக்கு பக்கம் நுழைவு வாயிலில், எதிரில் தல விருட்சாஅன அரசு மற்றும் வேம்பு உள்ளது. நந்தி மண்டபத்தில் பலி பீடம் மற்றும் நுழைவு வாயில் இடபக்கம் பிரம்மா மற்றும் பாலமுருகனும், வலப்பக்கம் சோமாஸ்கந்தர் மற்றும் நந்தியும் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் சித்திவிநாயகர் கருவறையில் மூலவர் பிள்ளையார்பட்டியை போல், சிவன் அமைப்பில் வரையப்பட்ட ஓவியம் போன்று ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் மூலவரான வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆயுள் விருத்திக்கும், சங்கடஹர சதுர்த்தியில் சகல விதமான தோஷம் நீங்கவும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டியது கிட்டவும், புத்திர பாக்கியத்திற்கும் சிறப்பு பரிகார ஸ்தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது.
தலபெருமை:
மூலவர் பிள்ளையார் பட்டி போன்று சிவன் வடிவில் வரையப்பட்ட ஓவியம் போன்று காட்சி அளிப்பதுடன், இத்தலத்திற்கும் கிழக்கே தியாகராஜர், மேற்கே அபிராமி சமேத கயிலாசநாதர் வடக்கே எண்கண் முருகன், தெற்கே பூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தா கோயில் இருப்பது இத்தலத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது.
தல வரலாறு:
திருவாரூரில் கோயில் அமைத்து தியாகராஜரை இந்திர லோகத்தில் இருந்து முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்து வர முற்பட்டுள்ளார். அதற்கு முன்பாக இப்பகுதியில் விநாயகரை கோயில் கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். அதன்பின் முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரலோகம் சென்றபோது, இந்திரன் தியாகராஜரை தர மறுத்துள்ளார். மேலும் தியாகராஜர் போன்று ஏழு உருவம் அமைத்துள்ளார். அப்போது முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட வலம்புரி விநாயகர் வண்டு உருவம் பெற்று உண்மையான தியாகராஜர் அருகே சென்று வட்டமிட்டுள்ளார்.
அதன் பின் முசுகுந்த சக்கரவர்த்தி உண்மையான தியாகராஜரை அடையாளம் கண்டு எடுத்து வந்தார் என்பது வரலாறு. அதன் மையமாக வலம்புரி விநாயகருக்கு கோயில் அமைத்துள்ளனர். அதன் பின் வேண்டுதல் நிறைவேறி வந்துள்ளது. மேலும் இக்கோயில் பிள்ளையார்பட்டி போன்று மூலவரான வலம்புரி விநாயகர் (ஈசன்) சிவலிங்கம் வடிவில் வரையப்பட்ட ஓவியம் போன்று உள்ளார்.
இப்பகுதியில் விநாயகருக்கு கோயில் கட்ட முற்பட்டபோது பூமிக்கடியில் இருந்து லிங்கம், நந்தி, பாலமுருகன், பிரம்ம உள்ளிட்ட விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலானது திருவாரூரிலிருந்து தஞ்சை செல்லும் பகுதியில் கிட்டத்தட்ட 13 கிமீ தொலைவில் உள்ளது.
