விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள பண்பொழி எனும் ஊரில் உள்ள திருமலை குமாரசுவாமி திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து கோவிலில் கேட்டு, கோவிலில் கேட்கும் நிற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம், மஞ்சள், குங்குமம், நல்எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து, நைவேத்யம் செய்து, பூஜை செய்து உங்கள் நட்சத்திர அதிபதி குரு கிரகத்தின் எண்ணிக்கையின்படி ஐந்து நபருக்கு அன்னதானம் செய்து வர வேண்டும். உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயகர் வழிபாடு கை கொடுக்கும். ஏழைகளுக்கு வெண்பொங்கல், அன்ன தானம் செய்யுங்கள். ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு வந்து சேரும்.
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்யவேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.
கோயில்: திருமலை குமாரசுவாமி கோயில், பண்பொழி
ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே!
இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.
அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன.
அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.
சிறப்பம்சம்:
விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் ஒரு காலத்தில் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும், அவை இங்கிருக்கின்றன.
இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். விசாகம் என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு வந்து வழிபடுவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., செங்கோட்டையிலிருந்து 7 கி.மீ., (தென்காசியிலிருந்து 15 கி.மீ) தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
